இஃது இந்திரனுக்கும் மதங்கன் என்பவனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலைத் தெரிவிக்கும் பகுதியாகும். இந்தச் சருக்கத்தின் மூலம், ‘பிராமணியம் என்பது உயர்ந்த நிலை; அது பெறுதற் கரியது; ஒருவேளை பெற்றாலும் பிராமணி யத்தை ஒழுங்காகக் காப்பாற்றுவது கடி னம். எனவே க்ஷத்திரியர் முதலாக உள்ள மூன்று வர்ணத்தார் பிராமணர் ஆவது என்பது சிறிதளவும் முடியாது. ஆத்ம சுத்தி பிராம இல்லாதவர்கள் பெறக்கூடாத பிராமணத் தத்துவத்தை வேண்டி முயன்றால், அவர் அழிந்து போவர்; எனவே அந்தப் பிராமண தன்மை என்பது ஜன்மத்தினால் வருவதேயன்றி இடையில் வராது” என்பது அறிய வேண்டிய ஒன்றாகும்.
தன் தந்தை சந்தனு மன்னன் கொடுத்த வரத்தினால், தான் நினைத்த அன்று உயிரை விடும் அரிய பேற்றைப் பெற்ற பீஷ்மரை நோக்கி, தர்மபுத்திரர், “பிதாமகரே! குரு க்ஷேத்திரப் போர் மூலம் யான் செய்த பாவங்களை உம்முடைய தேவாமிர்த மாகிய வார்த்தைகளினால், ஒலித்து அருள் செய்தீர் இனி க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்னும் பின் வருணத்தோர் மூவரும், முதல்வருணவத்தவராகிய பிராமணரோடு இசைந்து ஒரு நிகராகப் பிராமணத்தன்மை அடைதல் முடியுமா? சொல்லுங்கள் ” என்று கேட்க அதனை ஒரு கதை மூலம் பீஷ்மர் விளக்கலானார்.
ஓர் அந்தணன் தன் மைந்தன் மதங்கன் என்பவனை யாக நிமித்தமாகத் தர்ப் பையைக் கொணர்தற்குக் காட்டிற்கு அனுப்பினான். போகின்ற பொழுது எதிரே வந்த ஒரு கழுதைக் குட்டியினை அவன் அடித்து விட்டான். அந்தக் கழுதைக் குட்டியோ தன் தாயிடம் தன்னை மதங்கன் அடித்ததைக் கூறியது.
அதைக் கேட்டு தாய்க்கழுதை, “பிரா மணக் குலத்துக்கும் சூத்திரப் பெண்ணுக் கும் பிறந்த புலையன் (சண்டாளன்) அவன், பிராமணன் என்றால் உன்னை அடித்திருக்க மாட்டான், பிராமணன் என்பவன் எவ்வுயிரையும் தன்னுயிர் போலக் கருதி அன்பு பூண்டொழுகுபவன். அவன் உண்மையான பிராமணன் அல்லன், ஆகையால் உன்னை அடித்திட்டான்” என்றது.
தவத்தை மேற்கொண்ட மதங்கன்
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த மதங்கன் தாய்க்கழுதையிடம் சென்று. ”வேதியனாகிய என்னை ஒரு சண்டாளன் என்று சொன்னது எதனால்?” என்றான். அதற்கு அக்கழுதை, “உனது தாய் உன்னைச் சூத்திரன் ஒருவனுக்குப் பெற்றெ டுத்தாள். எந்த வருணமும் இல்லாதிருக் கின்ற காரணத்தினால்தான் நீ சண்டாளன் ஆயினாய்! அதனால் தான் உன்னைச் சண்டாளன் என்று கூறினேன்” என்றது.
தனக்கு வந்த பழியைக் கண்டு அஞ்சி, அவன் தன் தந்தையை நோக்கி, ‘இனி நான் காட்டிற்குச் சென்று தவத்தினை மேற் கொண்டு பிராமணியம் பெற்று, பிரா மணன் ஆவேன்” என்று கூறிக் காட்டிற்குச் சென்று தவத்தைச் செய்தான். மதங்கனின் தாய், முன்னர் வேதியனை மணந்திருந்தும் சோரம் போய், சூத்திரனிடத்துப் பிள்ளை (மதங்கனை) பெற்றதனால், மதங்கன் முன் மணந்த தந்தையை நோக்கப் பிராமணன் ஆயினும், தாய் பிராமணத்தன்மை இழந்து விட்டதனால், அப்பிராமணத் தன்மையை மீண்டும் பெற அரிய தவத்தை மேற் கொண்டான்.
நூறாண்டுக்காலம் தவம்
தவத்தை மேற்கொண்ட மதங்கன் முன், இந்திரன் தோன்றி, “ஒற்றைக்காலில் நின்று கொண்டு ஆகாயத்தை நோக்கியவண்ணம் நூறாண்டுக் காலம் கோரமான தவத்தை எதன் பொருட்டுச் செய்கின்றாய்?” என்று கேட்டான். அதற்கு மதங்கன், “நான் பிராமணன் ஆக வேண்டும் ” என்றான். அதற்கு இந்திரன் “அது நம்மால் ஆகாது வேறு வரம் வேண்டுமென்றால் கேள் என்றான். அதற்கு மதங்கன், ‘எனக்கு வேறு வரம் வேண்டா. இது தான் வேண்டும்” என்று பதில் சொல்ல “அது எம்மால் முடியாது” என்று மீண்டும் சொல்லி அவ்விந்திரன் போய் விட்டான்.
மீண்டும் மதங்கன் கால் கட்டை விரலை மட்டும் தரையில் வைத்து உடல் இளைத்து, கீழே விழும் அளவுக்குத் தளர்ந்து போகும் வண்ணம் நூறாண்டுகள் கடுந்தவம் செய்தான். அப்பொழுதும் இந்திரன் தோன்றி, “எதற்கும் பயன்படாத விரதத்தை மேற்கொண்டு தவத்தைச் செய்து உடலை ஏன் வீணாகக் கெடுத்துக் கொள்கிறாய்? இந்த ஒரு பிறப்பினால் பிராமணத்துவத்தை பெற்று நீ பிராமணன் ஆக முடியாது. பல பிறவிகள் எடுத்தபின் ஒரே ஒரு தடவை பிராமணப் பிறவி கிடைக்கும். மதங்கா! இன்னும் சொல்லு கின்றேன் கேள்.
“பொறுமையை மேற்கொண்டு தவத்தை நூறு மடங்கு செய்பவர்கள், புலையர்களாகவும், சண்டாளர்களாகவும் சூத்திரர்களாகவும் பிறப்பார்கள்; அந்த சூத்திரர்கள் இன்னும் நூறு மடங்கு பொறுமையுடன் தவம் செய்தால் வைசியர் ஆகலாம். அந்த வைசியர்களோ இன்னும் ஆயிரம் மடங்கு பொறுமையுடன் தவம் செய்தால் க்ஷத்திரியர் ஆகலாம். அந்த க்ஷத்திரியர்கள் இன்னும் ஆயிரம் மடங்கு பொறுமையுடன் தவம் செய்தால் பிராமணர் ஆகலாம். அந்தப் பிராமணர்கள் இன்னும் பத்தாயிரம் மடங்கு பொறுமை யுடன் தவம் செய்தால் பிராமண சிரேட்டர் ஆகலாம்.
‘எனவே இத்தகைய மிக அரிதான தவம் செய்வதை விட்டு விடு; அது பெறுதற் கரியது. இதுவரையில் செய்த தவத்திற்கே நீ நல்ல அழகு பெற்று, உலகிலுள்ள பெண்கள் அனைவரும் உன்னை ‘சந்தோ தேவன்’ என்று போற்றும் வண்ணம் புகழ் பெற்றுத்திகழ்வாய். அவர்கள் செல்வத் தைக் குறித்து செய்யும் கர்மாக்களில் உன்னையே பூஜிப்பார்கள். நீ போய் விடுக” என்று கூறினான்.
இந்திரன் சென்ற பின் மதங்கன் சிறந்த மேனியழகு பெற்று, பல பெண்கள் போற்ற இப்புவியில் நீண்ட காலம் வாழ்ந்தான்.
சண்டாளன் என்றால் என்ன?
பிராமணப் பிறப்பை பற்றி, “விலங்கு ஜாதியில் பிறந்தவை அனைத்தும் மானிட ஜன்மத்தை அடைந்தால் சண்டாளனாக பிறப்பது திண்ணம் (கலப்பு ஜாதியில் பிறந்தவர்களை சண்டாளன் என்பர் அக்காலத்தோர்) ஆயிரம் தடவை ஜனித்த பிறகு சூத்திர ஜாதியில் அவன் பிறப்பான்) முப்பது முறை சூத்திர ஜாதியில் பிறந்த பிறகு வைசிய ஜன்மத்தை அடைகிறான்; அறுபது முறை வைசிய குலத்தில் பிறந்த பிறகு, பிராமண ஜாதியில் தாழ்வான ஜன்மத்தை அடைகிறான். தாழ்வான பிராமணன் இருநூறு முறை அக்குலத்தில் பிறந்த பிறகு, அவன் ஆயுதம் பிடித்து ஜீவிக்கும் பிராமணன் ஆகிறான். அவன் முந்நூறு முறை தவம் செய்த பிறகு ஜபம் செய்யும் பிராமணனாகப் பிறக்கிறான். அந்த ஜபம் செய்யும் பிராமணன் நானூறு முறை பிறந்த பிறகு வேதங்களைப் பொருளுடன் அறிந்து அவற்றை வாழ்க்கை யில் அனுஷ்டிக்கின்ற ச்ராத்திரன் ஆகின்றான். ஆகலின் பிராமணன் ஆவது கடினம்” என முதல் நூலாகிய வியாச பாரதம் கூறுகிறது.
அதன் பின்னர் தர்மபுத்திரர், “மதங்கன் பிராமணன் ஆகாமலிருந்தது சரி; க்ஷத்திரியனாகிய விசுவாமித்திரன் வேறு தேகம் புகாமல் பிராமணரானது எப்படி?என்ற ஒரு கேள்வியை எழுப்பினார்.
ஸத்தியவதியை மணந்த ரிசீகன்
காதி என்னும் அரசனுக்கு ஸத்தியவதி என்றொரு பெண் இருந்தாள். அவளை, ரிசீகன் என்றொரு பிரமரிஷி, ஒற்றைக்காது கறுத்தும். மற்றைய மேனி முழுவதும் சந்திர கிரணக்கதிர் போல பிரகாசித்தும் விளங்கக் கூடிய வாயு வேகமுள்ள ஆயிரங்குதிரைகளை வருண பகவான் அருளால் பெற்று அவற்றைக் காதி என்னும் அரசனுக்குத் தந்து ஸத்தியவதியை மணந்தார். ரிசீகனின் பெருமையை உணர்ந்ததால் காதி அரசன் மனைவி தனக்கு ஒரு புத்திரன் அருளும்படி வேண்டினாள். அதனால் அவர் யாகம் செய்து, இரு ஹவிஸ்களை உண்டாக்கித் தன் மனைவி ஸத்தியவதியிடம் கொடுத்து, ருது ஸ்நானம் செய்த பிறகு உன் தாய் அரச மரத்தையும், நீ அத்திமரத்தையும் தழுவிக் கொண்டு, பின்னர் மந்திரத்தினால் ஜபிக்கப்பட்டு பரிசுத்தமாயுள்ள இந்த ஹவிஸ்களை உண்ணுங்கள்; அதனால் இருவரும் புத்திரர்களை அடைவீர்கள்” என்று கூறிக் கொடுத்தார்.
அவர்களோ, அவர் கூற்றுக்கு மாறாக இருவரும் தத்தம் ஹவிஸ்களை மாற்றிக் கொண்டனர். தழுவுகின்ற மரங்களையும் (தாய்-அத்தி மரம்; சத்தியவதி- அரசமரம்) மாற்றிக் கொண்டு, மாற்றிக்கொண்ட ஹவிஸையும் உண்டனர்.
அதன் விளைவாக பிரம்மதேஜஸ் கொண்டிருந்த ஹவிஸை ஸத்தியவதியின் தாய் உண்ண ஸத்தியவதி க்ஷத்திரிய சக்தி முழுவதும் கொண்டிருந்த ஹவிஸைத்தான் உண்ணும்படி நேர்ந்தது.
ஆகவே காதியின் மனைவி க்ஷத்திரிய ஸ்திரீயாயினும் அவள் வயிற்றில் ரிசீக மஹரிஷியின் அனுக்கிரகத்தினால் விஸ்வா மித்திரர் பிராமண்யம் பெற்று பிரம்மரிஷி ஆனார். எனவே க்ஷத்திரியராயிருக்கும் பிராமணத்துவத்தை அடைந்து பின்னர் அவர் பிராமண சந்ததியை உருவாக்கிக் காட்டினார்.
தர்மராசனே! அதனால் தான் க்ஷத்திரிய ரான விஸ்வாமித்திரர் சிறந்த தவமுள்ள பிரம்மரிஷியானார் என்று பதில் கூறினார். (இந்த வரலாறு ஏற்கனவே சொல்லப்பட்டி ருந்தும் தெளிவாக அறிந்து கொள்ளும் பொருட்டு மீண்டும் இங்கு சொல்லப் பட்டுள்ளது).
எது சிறந்தது?
அடுத்து தர்மபுத்திரர் பீஷ்மரை நோக்கி. “பிதாமகரே! ஊழ்வினை, முயற்சி என்னும் இரண்டினுள் எது சிறந்தது” என்று கேட்டார்.
அதற்குப் பிதாமகர் பீஷ்மர், “தொடக்கத் தில் நாம் ஊழ்வினையால் உந்தப்பட்டு ஒரு காரியத்தில் புகுகின்றோம். ஆகவே அவ்வூழ்வினை சிறிதளவு நிறைவேறுமே யன்றி முற்றிலும் நிறைவேறாது. முற்றிலும் நிறைவேற முயற்சி தேவை. மிகச் சிறிய நெருப்பு காற்றினால் தூண்டப்பட்டு பெரிதாகும். காற்றில்லையேல் நெருப்பு எங்கணும் பரவிப் பெரிதாக எரியாது. இரண்டும் சேர வேண்டும். அஃதே போல் ஊழ்வினை முயற்சியுடன் சேர்ந்து நன்றாக அபிவிருத்தி அடைகிறது. எடுத்தகாரியம் முயற்சி இன்றேல் முற்றிலும் நிறை வேறாது” என்று பதில் கூறினார்.
பீஷ்மரின் கருத்தினை,
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற திருக்குறள் பிரதிபலிப்பதை காண்க.
“ஒருவன் நல்ல நிலையிலிருக்கும்போது அவன் உதவி பெற்றும் அவனை அண்டி வாழ்ந்தும் உள்ள சிலர் அவனுக்குத் துன்பம் வருங்கால் விலகி நிற்கின்றனர். சிலர் மட்டும் உடனிருக்கின்றனர். இவற்றில் எது சரி? என்று உலகில் பெரு வழக்காக இந்த நிலைகள் இருத்தலின் தர்மபுத்திரர் இவ்வினாவை எழுப்பினார். வேடன் ஒருவன் கொடிய அம்பொன்றை, இலை, கனி, காய்கள் இருக்கக் கூடிய மரத்தின் மீது ஏவினான். கொடிய விஷம் தடவிய அம்பு பாய்ந்ததால் அம்மரம் இலை, காய்கள் உதிர்ந்து கீழே விழுந்து வற்றல் மரமாகியது.
அம்மரப் பொந்திலேயே நீண்ட காலம் வாழ்ந்திருந்த கிளியொன்று மரம்,வற்றல் மரமாகியும், அம்மரத்தை விட்டுப் போகா திருந்தது. அம்மரத்திலேயே இருந்ததால் காய், கனிகள் கிடைக்கப் பெறாது பெரிதும் துன்பத்தை அனுபவித்தது.
இந்திரனிடம் கிளி கேட்ட வரம்
அப்பொழுது அந்தண வடிவத்தில் அங்கு வந்த இந்திரன், ‘அக்கிளியிடம் வந்து, “கிளியே! பழுத்த மரங்களை விரும்பி அவற்றின்பால் தாவிச் செல்லும் பறவைகள் நீங்கள்; அப்படியிருக்க, பழுத்த வேறோர் மரத்திற்குப் போகாமல், இந்த உலர்ந்த மரத்தையே விடாமல் ஏன் இங்கேயே இருக்கின்றாய்? சொல்” என்றார். அதற்கு அந்தக் கிளி, இந்த மரத்திலுள்ள பழங்களையும், காய்களையும் அன்போடு அளவற்ற நாட்கள் உண்டேன். இப்பொழுது இந்த மரம் உலர்ந்து விட்டது. இத்தகைய துன்பம் இந்த மரத்திற்கு வந்து விட்டதைப் பார்த்தும் இன்பம் தேடி வேறு மரத்திற்குச் செல்வது சிறந்த தோ? நீயே கூறுவாயாக” என்றது.
உடனே அந்தண வடிவத்தை விட்டு இந்திரனாக அக்கிளி முன் நின்று, “கிளியே! இந்த மரம் உலர்ந்து வாடி வதங்கி போயிருத்தல் போல நீயும் பசியால் வாடி வதங்கிப் போதல் நன்றாக இல்லை உனக்கு ஒரு வரம் தருகின்றேன் கேள்” என்று கூறினான். அதற்கு அந்தக் கிளி, “இந்த மரம் முன்னைப் போலவே காய்கனிகளுடன் செழித்து இருக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டது. இந்திரனும் அந்த மரத்தின் மேல் தேவாமிர் தத்தைப் பொழிந்தனன். உடனே அம்மரம் இலைகளும், காய்களும், கனிகளும் உடையதாய் செழித்து விளங்கியது. “ஆதரவு அளித்தவரை விட்டு ஒருபோதும் பிரியக்கூடாது” என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம் அல்லவா” என்று பீஷ்மர் பதில் கூறினார்.
ஞானத்தில் உயர்ந்த பரஞானம் எது?
“ஞானத்தில் உயர்ந்த பரஞானம் என்பது எது? சொல்வாயாக” என்று தர்மபுத்திரர் கேட்சு, பீஷ்மர், “விஷ்ணுவின் அழகிய திருவடிகளை தரிசித்தலாகும் ” என்று கூறிய அவர் மேலும், ‘சிவபெருமான், நான்முகன், திருமால் என்னும் மும்மூர்த்தி களை முதலாகக் கொண்ட எல்லா தேவர் களும் தொழ விளங்குகின்ற துவாரகை நாதனாகிய கண்ணனே ஞானத்திற்கும் மேலான பரஞானம் ஆகும்” என்று கூறி முடித்தார்.
அப்பொழுது அங்கிருந்த சில முனிவர் கள், “சில நாட்களுக்கு முன் ஒருத்தி (தேவகி) மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி (யசோதை) மகனாய் வளர்ந்து இன்று நம்மோடு இருக்கும் கண்ணபிரானா பரஞானம்?” என ஐயுற்றுக் கேட்டவர் களைப் பார்த்து, பீஷ்மர், “உளி சிறிய தாயினும் பெரிய மலையையே பிளக்கும். அஃதே போல நம் கண்ணபிரான் தேவகி புத்திரன் ஆனாலும், நம்மோடு கூடிக் குலவுகின்றவன் ஆனாலும் அவனை எளியன் என்று எண்ணாதீர். அவன் பரஞான ஸ்வரூபன்; எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழிக்கும் ஆற்றலுடைய வன்; மேலும் அவன் பரப்பிரம்மம் என்பதை குருசேக்ஷத்திரப் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு, தேரோட்டியாக இருந்து கீதோபதேசம் செய்ததும், அந்த அர்ச்சுன னுக்கு விசுவரூப தரிசனம் தந்ததையும் கொண்டு அறியலாம். எல்லாவற்றிற்கும் மேலாக அப்பரம்பொருள் தன் சங்கற்பத் தின் படியே தர்மபுத்திரர் செய்த பாக்கியத் தால் நம்முள் ஒருவனாகப் பழகி வருகின்றான்” என்று சொல்ல, கண்ண பிரான் அப்போது குறு நகையுடன் ஒன்றுமே அறியாதவன் போல இருந்தான். முனிவர்கள் மகிழ்ந்தனர். அனைவரும் உளம்
”பிதாமகரே! சிலர் நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பதும், வேறு சிலர் அற்ப ஆயுள் உள்ளவராய் இருப்பதும் எதனால்?” என்று தர்மபுத்திரர் கேட்டார்.
அதற்கு, பிதாமகர் பீஷ்மர், “நல்லொ ழுக்கத்தினால் மனிதன் நீண்ட ஆயுளை அடைகிறான். பெருஞ்செல்வத்தையும் அடைகின்றான். அதோடு புகழையும் அடைகின்றான்.”
மனிதன் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
(1) மனிதன் விடியுமுன் எழுந்திருக்க வேண்டும். வாயையும் முகத்தையும் நன்கு கழுவ வேண்டும். குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். ஆடையின்றிக் குளித்தல் கூடாது.காலை வணக்கம் செய்ய வேண் டும்.
(2) சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரம், நண்பகல் நேரம், கிரகணம் பிடிக் கும் நேரம் போன்ற சமயங்களில் சூரியனை யும், தண்ணீரில் சூரிய பிம்பத்தையும் காணக்கூடாது.
(3) கையிலே தர்ப்பையை வைத்துக் கொண்டு, மௌனத்துடன், பரிசுத்த உள்ளத்தனாகி, மனத்தில் இறைவனையே நினைத்து சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.
(4) பிறர் பயன்படுத்திய ஆடைகளை உபயோகிக்கக்கூடாது.
(5)அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தசி. அஷ்டமி, துவாதசி, தான் பிறந்த நாட்களில் மனைவியோடு சேர்வதைத் தவிர்க்க வேண்டும்.
(6) தீயினால் சுட்டபுண் உள்ளாறும் நாவினால் சுட்டவடு ஆறாது, ஆதலின் எவரையும் கடுஞ் சொற்களால் தூஷிக்கக் கூடாது.
(7) தினந்தோறும் வேதங்களையும். இதிகாசங்களையும் படிக்க வேண்டும். உறங்கி எழுந்தவுடன் தாய் தந்தையரையும், பின்னர் ஆசாரியரையும் வணங்க வேண் டும்.
(8) வடக்கு, மேற்கு போன்ற திசைகளில் தலை வைத்து படுக்கக் கூடாது.
(9) எப்பொழுதும் மௌனமாய் கிழக்கு முகமாய் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஈரக் கால்களுடன் படுக்கக்கூடாது. ஈரக்கால் களுடன் சாப்பிட வேண்டும்.
(10) உணவு உண்ட பின் தயிர் குடிக்கக் கூடாது. இரவில் அதிகம் சாப்பிடக்கூடாது.
“இவை போன்றவற்றை கடைப்பிடித் தால் ஆயுள் வளரும்” என்று கூறினார்.
“சிறந்த உபவாசகங்களின் பெயர்களை யும், பலன்களையும் சொல்ல வேண்டும் ” என்று தர்மபுத்திரர் கேட்க பீஷ்மர் கூறலானார்.
(1) சித்திரை மாத துவாதசி இரவிலும் பகலிலும் ‘விஷ்ணு’ என்ற திருநாமத்தை சொல்லிப்பூஜிக்க வேண்டும். அவன் பௌண்டரீகயாக பலனை அடைவதோடு, தேவலோகத்திற்கும் செல்வான்.
(2) வைகாசி மாத துவாதசியில் ‘மதுசூதனன்’ என்ற திருநாமத்தை சொல்லி பூஜிக்க வேண்டும். அவன் அக்னிஷ் டோமயாக பலனை அடைவதோடு சந்திர லோகத்திற்கும் செல்வான்.
(3) ஆனி மாத துவாதசியில் இரவிலும் பகலிலும் ‘திரிவிக்ர நாமத்தை பூஜிக்க வேண்டும். அவன் கோதகம் என்னும் யாகத்தின் பலனை அடைவதோடு தேவ லோகக் கன்னியரை அவன் அடைவான்.
(4) ஆடி மாதத் துவாதசியில் ‘வாமனா’ என்று சொல்லி வணங்க வேண்டும். அவன் நரமேத யாகத்தின் பலனை அடைவதோடு பெரும் புண்ணியத்தை அடைவான்.
(5) ஆவணி மாத துவாதசியில் இரவிலும் பகலிலும் ‘ஸ்ரீதரன்’என்ற நாமத்தைச் சொல்லி வணங்க வேண்டும்.
அவன் பஞ்ச மகாயக்ஞங்களின் பலனை அடைவதோடு, தேவவிமானம் ஏறும் வாய்ப்பும் கிடைக்கும்.
(6) புரட்டாசி மாத துவாதசியில் இரவும் பகலிலும் ‘ரிஷிகேசா’ என்ற அவன் திரு நாமத்தைச் சொல்லி பூஜிக்க வேண்டும். அத்தகையவன் ‘சௌத்ராமணி’ என்ற யாகத்தின் பலனை அடைவதோடு, ஆத்ம சுத்தியுள்ளவனாகவும் இருப்பான்.
(7) ஐப்பசி மாத துவாதசியில் இரவிலும் பகலிலும் ‘பத்மநாப’ என்ற அவன் திருநாமத்தைச் சொல்லிப் போற்ற வேண் டும். அதனால் அவன் ஆயிரம் கோதானங் களைச் செய்த பலனை அடைவான்.
(8) கார்த்திகை மாத துவாதசியில் இரவிலும் பகலிலும் ‘தாமோதரா’ என்னும் திருநாமத்தைச் சொல்லி வணங்க வேண்டும். அவன் கோமேதக யாகத்தின் பலனை அடைவான்.
(9) மார்கழி மாத துவாதசியில் ‘கேசவ’ நாமத்தைச் சொல்லி ஆராதிக்க வேண்டும். அத்தகையவன் அஸ்வமேதயாகம் செய்த தன் பயனை அடைவான். அவனுடைய பாவம் நீங்கும்.
10) தை மாதம் துவாதசியில் ‘நாராயணா’ நாமத்தைச் சொல்லி பூஜிக்க வேண்டும். அத்தகையவன் வாஜபேய யாகத்தின் பயனை அடைவான். தவப்பலனையும் பெறுவான்.
11) மாசி மாதம் துவாதசியில் ‘மாதவ’ மாமத்தைச் சொல்லி ஆராதிக்க வேண்டும். அவள் இராஜசூயயாகம் செய்ததன் பயனைப் பெறுவான்.
12) பங்குனி துவாதசியில் ‘கோவிந்த’ நாமத்தைச் சொல்லி ஆராதிக்க வேண்டும். அவ் அதிராத்ராயாகத்தின் பயனைப் பெறுதலோடு சந்திர லோகத்தையும் அடைவான். இவ்வாறு ஆண்டு முழுவதும் தாமரைக் கண்ணனைப் பூஜிப்பவன் பூர்வ ஜென்ம ஜானத்தைப் பெறுவதோடு செல்வத்தையும் பெறுவான்.
இதன்படி ஒவ்வொரு நாளும் விஷ்ணுவைப் பக்தியுடன் மனதார பூஜிக்க வேண்டும்” என்று கூறி முடித்தார்.
வாக்குத்தத்தம்
(10) ‘வாக்குத் தத்தம் செய்த பொருளைப் பிராமணனுக்குக் கொடுக்காம லிருந்தால் என்ன விளையும்?”
நரியானது ஒரு பிணத்தின் மாமிசத்தைத் தின்ன முயன்றது. அதனைக் குரங்கொன்று நோக்கி, “உனக்குப் பிணத்தின் மாமிசத்தை பிடுங்கித் தின்னும் பாவம் எவ்வாறு நேர்ந்தது?” என்று கேட்டது.
அதற்கு நரியானது, “முன் ஜன்மத்தில் பிராமணன் ஒருவனுக்குப் பொருள் கொடுப்பேன் என்று வாக்குத் தத்தம் செய்து விட்டு பின்னர் இறந்து போனேன். “அந்த பாவத்தால் இந்த ஜன்மத்தில் நரியாய் பிறந்தேன்” என்றது. அதனைக் கேட்டு குரங்கானது, “இதுதான் உன்னு டைய கதையா!” என்று கூறி இகழ்ந்து சென்றது. இதிலிருந்து வாக்குத் தத்தம் செய்த பொருளைப் பிராமணர்க்குக் கொடுக்காமல் தவிர்த்தால் பிணம் தின்னும் நரியாகப் பிறப்பர்” என்பது தெரிகிறது” என்று பீஷ்மர் கூறினார்.
நற்கதி கிடைக்குமா?
(11) “கருதிய மந்திரங்கள், ஜபங்கள் ஆகியவற்றை தாழ்ந்த வருணத்தவராகிய சூத்திரர்கள் கற்றறிந்தால் அவர்கள் நற்கதி அடைவரோ?” என்று தர்மபுத்திரர் கேட்டார்.
”தர்மபுத்திரரே! கருதிய மந்திரங்கள், ஜபங்கள் ஆகியவற்றை நாலாம் வருணத் தைச் சேர்ந்த சூத்திரருக்கு உபதேசம் செய்யக் கூடாது. அதனால் உபதேசம் செய்து வைத்த ஆசார்யனுக்கு இடுக்கண் உண்டாகும். அதற்கு மாறாக அந்தக் குருவை வணங்கி, அந்தணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வருணத்தார் உபதேசம் பெற்றால் அவர்கள் முத்தி அடைவர். மேலும் பிராமணக் குலத்தில் பிறந்தோர் யாவரும் பிராமணக் குலத்துக் குரிய – ஒழுக்கத்தில் தளர்ந்தவனுக்கு உபதேசம் செய்தல் கூடாது. மாறாக உபதேசித்தால் உபதேசம் பெற்ற இழிந்த பிராமணனோடு உபதேசித்த ஆசாரியரும் தாழ்வான ஜெ ஜென்மத்தை அடைவான்” என்று கூறினார்.
திருமாலின் மாண்பு
(12) “நிலையாகக் காக்கும் தொழிலை செய்கின்றவனும், கங்கையைத் தன் திருவடியில் வைத்திருப்பவனும் ஆகிய விஷ்ணுவின் மாண்பினை கூறுக” என்று தர்மபுத்திரர் கேட்க, அதற்குப் பிதாமகர் பீஷ்மர், “கருடனானவன் தன் தாயார் வினதையின் துயரம் நீங்கும் பொருட்டு. தேவலோகம் சென்று, இந்திரனை வன்று, தேவாமிர்தத்தைக் கொணரும் ளில், திருமால் அவன் முன்னே தோன்றி, அவனுடைய முயற்சியைப் பாராட்டினார். பின்னர் அவர் அக்கருடனைத் தனக்கு வாகனமாகவும் (பெரிய திருவடி) தாம் தேரிலிருக்கும் போது கொடியாகவும் விளங்கும்படி அருள் பாலித்தார்.
இந்நிகழ்ச்சியை கருடன் தன்னைப் பெற்ற தந்தையான காசியப முனிவருக்கு சொல்ல, தந்தையாகிய காசியப முனிவரும் மனமகிழ்ந்து, நீ செய்துள்ள நற்பேறு வேறு எவருக்குக் கிடைக்கும் ? சாத்திர முறைப்படியே பத்திரி காசிரமம் சென்று பத்ரி நாராயணனின் திருப்பாதங்களில் பணிந்து வணங்கி ஈடேறுவாயாக என ஆசீர்வதித்து அனுப்பினார்.
தந்தையாகிய காசியப முனிவர் விடை கொடுத்தனுப்ப, கருடன் பத்ரி காசிரமத்தை அடைந்து, விஷ்ணுவைத் தரிசித்து, வணங்கி நிற்க, துளப மாலை அணிந்த திருமால் மகிழ்வோடு, “என்னோடு என்றும் இருத்தி நீ” என்று கூறி, அந்த கருடனுடன் ஒரு பக்கம் சென்றான். சென்றான். அந்த இடம் ஒரே இருட்டாக இருப்ப, கருடன் திகைத்து நின்றான். அதனால் திருமால் கருடனுக்கு ஞானக்கண் கொடுத்து, “பற்பல அதிசயங்களாய்த்தான் சஞ்சரித்து விண்ணுக்கும் மண்ணுக்குமாக ஓங்கி பிரகாசமோடு இருப்பதைக் காண்பித்தான். கருடனும் ஞான விழியால் அதனைக் கண்டான். ஆனாலும் அனேக கோடி சூரிய பிரகாசத்தையும், விஞ்சியுள்ள திவ்விய தேஜசும், திவ்விய சக்தியும் கொண்ட விஷ்ணுவின் ஸ்வரூபத்தையும் கருடனால் முற்றிலும் காண முடியவில்லை. பின் அவ்விஷ்ணுவின் அருளால், விண்ணை யும், மண்ணையும் அடங்க நடந்தவனாகிய விஷ்ணுவும், பத்ரிகாசிரமும், அதனுள் அடங்கிய அம்மாயன் நிலமும் ஆகிய நர நாராயணாச்சரமமும் கண்ணெதிரில் தெரிய அதிசயித்து ஆச்சரியமுற்றான்.
அப்பொழுது “இந்த அற்புதத்தின் தன்மையை விளக்கி எனக்குச் சொல் வாயாக” என்று கருடன் வேண்ட எம்பெரு மான், “ஞானக்கண் கொண்ட ஞானியரும் விளங்கிக் கொள்ளார்” என்று கூறுவானே யானால் “கண்கள் ஒளி மழுங்கியுள்ள, உயிர் போகும் நிலையிலுள்ள நான் அவ்வெம் பெருமானின் அற்புதங்களை எவ்வாறு விளக்கமாகக் கூற முடியும்?” என்று பத்ரி காசிரமம் என் திவவியதலம் ஒன்றைக் கொண்டு எம்பெருமானின் மாண்பினை கூறினார். திருமாலின் பெருமையை இங்கு பறை சாற்றிய பத்ரி காசிரமத்தைப் பற்றி இங்கு காண்போம்.
இஃது இமயமலைப் பிரதேசத்து ரிஷி கங்கா, அலெக்நந்தா என்ற இரண்டு நதிகள் கூடுகின்ற இடத்தில் சமுத்திர மட்டத்திற்கு 10,000 அடிக்கு மேல் உள்ளது. ‘பத்ரி’ என்பது இலந்தையைக் குறிக்கும். இந்த இலந்தை மரத்தின் கீழிருந்து ஸ்ரீமந் நாராயணன் நரனுக்கு அரிதான திருமந் திரத்தை உபதேசித்து அருளினான். இங் குள்ள இரண்டு குன்றுகள் நரன் என்றும், நாராயணன் என்றும் பெயர் பெற்றுள்ளன. இவ்விரண்டுக்கும் இடை வெளியில் நோக்கினால் நீலகண்ட மலைச்சிகரம் பனி மூடியபடி அதிகாலையில் நீல நிறமாகத் தெரியும். இதனை இந்திர நீலப்பருப்பதம்’ என்பர்.
இங்கு நாரத குண்டம், சூரியகுண்டம் என்ற இரு உஷ்ணமான நீரைக்கொண்ட குளங்கள் (தப்த குண்டம்) உள்ளன. இங்குள்ள பத்ரி நாராயணர் சாளக் கிராமத்திலானவர்; பத்மாசனம் கொண்டி ருப்பவர். இவர் ‘பத்ரி விசால்’ எனப்படு வார். இங்குள்ள தாயார் அரவிந்த வல்லி. ஆறு மாத காலந்தான் இந்த கோயில் திறந்திருக்கும். மற்றைய காலங்களில் பனி மிகுந்த காரணத்தால் இக்கோயில் மூடியிருக்கும். பிரம கபாலம் என்பது இந்த அலெக் நந்தா நதியின் கரையில் உள்ளது. இந்துக்கள் சிராத்தம் செய்து பிண்டமிடும் இடம் இதுவேயாகும்.
இங்கு பத்ரி நாராயணரோடு அவரு டைய திருவடியின் கீழ் கருடன் நின்று கொண்டு கை கூப்பி இருப்பதை இன்றும் காணலாம். இங்கு முக்கியமாக தரிசிக்க வேண்டியவர்கள் நரனும் நாராயணனு மாகிய இருவரே ஆவர். இவர்கள் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியிருக்கின்றார் கள்; ஆசார்ய-சிஷ்ய கிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும் விளக்கும் பொருட்டு நரனென்னும் சிஷ்யனும், நாராயணன் என்னும் ஆசார்யனுமாக திருமாலே தோன்றி, சிஷ்யனுக்கு, ஆசார்யன் தத்துவ பொருளை உபதேசிப்பதாக வீற்றிருக் கின்றார். இதனால் இதனை ‘நர நாரா யணாச்ரமம்’ எனவும் வழங்குவர். ‘பத்ரி நாத்’ என்று இக்காலத்தில் வழங்குகின்ற னர். வேறொன்றிலும் பற்றில்லாத ஞான சிரேட்டர்களே இவ்விறைவனை தியானம் செய்து அறிய முடியும். திருமங்கை யாழ்வார் இப்பத்ரிகாசிரமத்தை மங்களா சாசனம் செய்துள்ளார்.
திருமங்கையாழ்வார் பாசுரங்கள்
திருவதரி
(அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)
1) முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி
நோக்கி வளைந்து இற்ற கால்போல் தள்ளி மெள்ள இருந்தங்கு இளையா முன் பெற்ற தாய்போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை வற்ற வாங்கியுண்ட வாயான் வதரி வணங்குதுமே.
2] முதுகு பற்றிக் கைத்த லத்தால் முன்னொரு கோலூன்றி விதிர்விதிர்த்துக் கண்சு ழன்று மேற்கிளை கொண்டிருமி ‘இதுவென் னப்பர் மூத்த வாறு’என் றிளையவர் ஏசாமுன் மதுவுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே.
3] உறிகள் போல் மெய் நரம்பெழுந் தூன் தளர்ந் துள்ளமெங்கி நெறியை நோக்கிக் கண்சு ழன்று நின்று நடுங்காமுன் அறிதி யாகில் நெஞ்சம்! அன்பாய் ஆயிர நாமம் சொல்லி வெறிகொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே.
4) பீளை சோரக் கண்இ டுங்கிப் பித்தெழ மூத்திருமி தாள்கள் நோவத் தம்மில் முட்டித் தள்ளி நடவாமுன் காளை யாகிக் கன்று மேய்த்துக் குன்றெடுத் தன்று நின்றான் வாளை பாயும் தண்த டஞ்சூழ் வதரி வணங்குதுமே.
5) பண்டு காம ரான வாறும், பாவையர் வாயமுதம் உண்ட வாறும், வாழ்ந்த வாறும், ஒக்க வுரைத்திருமி தண்டு காலா வூன்றி யூன்றித் தள்ளி நடவாமுன் வண்டு பாடும் தண்துழாயான் வதரி வணங்குதுமே.
6) எய்த்த சொல்லோடு ஈளை யேங்கி இருமி இளைத்துடலம் பித்தர் போலச் சித்தம் வேறாய்ப் பேசி அயராமுன் அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ்கட லைக்கடைந்த மைத்த சோதி எம்பெ ருமான் வதரி வணங்குதுமே.
7] ‘பப்ப அப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சித்திரனை ஒப்ப ஐக்கள் போத வுந்த; வுன்தமர் காண்மின் என்று செப்பு நேர்மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம் வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதுமே.
8) “ஈசி போமின் ஈங்கி ரேன்மின்; இருமி இனைத்தீர் உள்ளம் கூசி யிட்டீர்’ என்று பேசும் குவளையங் கண்ணியர்பால் நாச மான பாசம் விட்டு நன்னெறி நோக்கலுறில் வாசம் மல்கு தண்து ழாயான் வதரி வணங்குதுமே.
9] புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந் துள்ளமென்கி கலங்க ஜக்கன் போத வுந்திக் கண்ட பிதற்றாமுன் அலங்க லாய தண்துமு ழாய்கொண்டு ஆயிர நாமம் சொல்லி வலங்கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே.
10] வண்டு தண்தே னுண்டு வாழும் வதரி நெடுமாலை கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலிமாலை கொண்டு தொண்டர் பாடி ஆடக் கூடிடில் நீள் விசும்பில் அண்ட மல்லாமல் மற்ற நவர்க்கோர் ஆட்சி யறியோமே. திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
பதிகம்-2
திருவதரியாச்சிரமம்
1) ஏனமுன் ஆகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க தானவன் ஆகம் தரணியில் புரளத் தடஞ்சிலைகுனித்த எம் தலைவன் தேன்மர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறுமலர் கொணர்ந்து வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே.
2) கானிடை யுருவைச் சுடுசரந் துரந்து கண்டுமுன் கொடுந்தொழில் உரவோன் ஊனுடை அகலத்து அடுகணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்தனம் ஒருவன் தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு வானிடை முதுநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள் ளானே,
3) இலங்கையும் கடலும் அடலருந்துப்பின் இருநிதிக்குஇறைவனும், அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந்தொழில் புரிந்த கொற்றவன் – கொழுஞ்சுடர் சுழன்ற விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில் வெண்துகில் கொடியன விரிந்து வலந்தரு மணிநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள் ளானே
4] துணிவினி உனக்குச் செல்லுவன், மனமே! தொழுதெழு தொண்டர்கள் தமக்கு பிணியொழித் தமரர் பெருவிசும்பு அருளும் பேரரு ளாளன்எம் பெருமான் அணிமலர்க் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரிவந்து,அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே.
5)பேயிடைக் கிருந்து வந்தமற் றவள்தன் பெருமுலை சுவைத்திட பெற்ற தாயிடைக் கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்தஎந் தலைவன் சேய் முகட் டுச்சி அண்டமும் சுமந்த செம்பொன்செய் விலங்கலில் இலங்கு வாய்முகட் டிழிந்த கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே
6)தேர் அணங்கு அல்குல் செழுங்கயல் கண்ணி திறத்தொரு மறத் தொழில் புரிந்து பாரணங்கு இமிலேறு ஏழும் முன்அடர்த்த பனிமுகில் வண்ணன்எம் பெருமான் காரணந் தன்னால் கடும்புனல் கயத்த கருவரை பிளவெழக் குத்தி வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே.
7) வெந்திறல் களிலும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க் கரசும் இந்திரற்கு அருளி எமக்கு ஈந்து அருளும் எந்தைஎம் அடிகள்எம் பெருமான் அந்தரத் தமரர் அடியினை வணங்க ஆயிர முகத்தினால் அருளி மந்தரத் திழிந்த கங்கயிைன் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே
8) மான்முனிந்து கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன் ஊன்முனிந் தவன துடலிரு பிளவா உகிர்நுதி மடுத்து அயன் அரனைத் தான்முனிந்த திட்ட வெந்திறல் சாபந் தவிர்த்தவன் தவம்புரிந் துயர்ந்த மாமுனி கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே
9) கொண்டல் மாருதங்கள் குலவரை தொகுநீர்க் குரைகடல் உலகுடன் அனைத்தும் உண்டமா வயிற்றோன் ஓண்சுடர் ஏய்ந்த உம்பருர் ஊழியு மானான் அண்டமூடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்தங்கு அவனியாள் அலமர பெருகும் மண்டுமர மணிநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச் சிராமத்துள்ளானே
10] வருந்திரை மணிநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள் ளானை கருங்கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாய் ஒலி செய்த பனுவல் வரம் செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் இருங்கடல் உலகம் ஆண்டு வெண் குடைக்கீழ இமையவர் ஆகுவர் தாமே.
பெரிய திருமொழி
மகாபாரதம் – 60… இந்திர மதங்க சம்வாத சருக்கம் Asha Aanmigam