அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இன்று(ஆக.,4) வரை ரூ.30 கோடி நிதி வந்துள்ளது என ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நாளை காலை நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார்.
இந்நிலையில், கோவில் கட்டுவதற்கு வந்த நிதி விவரங்களை அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அதுகுறித்து அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆக.,4 வரை ரூ.30 கோடி நிதி வந்துள்ளது. நாளை மேலும் ரூ.11 கோடி நிதி வரும் என எதிர்பாரக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து ரூ.7 கோடி நிதி வந்துள்ளது. ஆனால் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும் அனுமதியை, அறக்கட்டளை முழுமையாக பெறாததால், அந்த நிதியை நிறுத்தி வைத்துள்ளோம். அனுமதி பெற்ற பின், பணத்தை பெற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.