மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்திரு ஆலவாயான் திருநீறே.
வேதத்தி லுள்ளதுநீறு வெந்துயர் தீர்ப்பதுநீறு
போதந் தருவதுநீறு புன்மை தவிர்ப்பதுநீறு
ஓகத் தருவதுநீறு உண்மையி லுள்ளதுநீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்ததிரு ஆலவாயான் திருநீறே.
முத்தி தருவதுநீறு முனிவர் அணிவதுநீறு
சத்திய மாவதுநீறு திக்கோர் புகழ்வதுநீறு
பத்தி தருவதுநீறு பரவ இனியதுநீறு
சித்தி தருவதுநீறு திரு ஆல வாயான் திருநீறே
காண இனியதுநீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பதுநீறு
மாணந் தருவதுநீறு மதியைத் தருவதுநீறு
சேணந் தருவதுநீறு திரு ஆலவாயான் திருநீறே
பூச இனியதுநீறு புண்ணிய மாவதுநீறு
பேச இனியதுநீறு பெருந்தவத் தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பதுநீறு அந்தம தாவதுநீறு
தேசம் புகழ்வதுநீறு திரு ஆலவாயான் திருநீறே.
அருந்தம தாவதுநீறு அவலம் அறுப்பதுநீறு
வருந்தத் தணிப்பதுநீறு வானம் அளிப்பதுநீறு
பொருந்தம் தாவதுநீறு புண்ணியர் பூசும்வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்திரு ஆலவாயான் திருநீறே.
எயிலது அட்டதுநீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவதுநீறு பாக்கிய மாவதுநீறு
துயிலைத் தடுப்பதுநீறு சுத்தம தாவதுநீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவாயான் திருநீறே.
ராவணன் மேலதுநீறு எண்ணத் தகுவதுநீறு
பராவண மாவதுநீறு பாவம் அறுப்பதுநீறு
தராவண மாவதுநீறு தத்துவ மாவதுநீறு
அராவணங்குந் திருமேனி ஆலவாயான் திருநீறே.
மாலொ டயனறியாத வண்ணமு முள்ளதுநீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவதுநீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங்கூடக்
கண்டிகைப் பிப்பதுநீறு கருதஇனியது நீறு
எண்டிசைப் பட்டபொருளார் ஏத்துந் தகையதுநீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயான் திருநீறே
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின் தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே.
இதனை ஓதி ஓதி உருவேற்றிக் கொண்டு நோய்வாய்ப் பட்டவர்க்கு இப்பதிகத்தை ஓதி திருநீற்றைப் பூசினால், நோய் நீங்கி நலம் உண்டாகும்.
திருநீற்றுப் பதிகம்… மந்திர மாவது நீறு… பாடல் Aanmeega Bhairav