மகாபாரதம் – 55 -3 திருதராட்டிரர் திருந்துதல்… காந்தாரியின் வார்த்தையைக் கேட்டு பீமன் அச்சம்

0
26

எஞ்சி நின்ற மூவர்

அப்போது வழியில் கிருபாசாரியார், அஸ்வத்தாமா, கிருதவன்மா,ஆகிய மூவரையும் திருதராட்டிரர் முதலானோர் கண்டனர். அரசனைக் கண்டவுடன் மூவரும் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்கள் திருதராட்டிரரிடம், ‘அரசே! உம்முடைய மைந்தர்கள் பாண்டவர்க ளோடு போரிட்டு வீர சொர்க்கம் அடைந் தனர். இப்பொழுது கௌரவர் சேனையில் நாங்கள் மூவர்தாம் எஞ்சி நிற்கின்றோம்’ என்று கூறினார்கள்.

அதன்பின் காந்தாரியைப் பார்த்து அவர்கள், “அரசியே! உன்னுடைய மைந்தர்கள் வீர சாகசங்கள் பல புரிந்து வீர மரணம் அடைந்தனர்; அவர்கள் அனை வரும் தற்போது சொர்க்கத்தில் உள்ளனர். பீமன் அதர்மமான முறையில் துரியோதன னைக் கொன்றான் என்பதைக் கேட்டு நாங்கள் பாண்டவர்கள் பாசறையை நாசம் செய்துவிட்டோம். அப்பாண்டவர்களின் மைந்தர்களாகிய உப பாண்டவர்களைக் கொன்றுவிட்டோம். அதனால் பாண்டவர்கள் எங்களைப் பழி வாங்க வாங்க வந்து கொண்டிருக்கின்றனர். எங்களால் அவர்களை வெல்ல முடியாது என்பது உண்மை. ஆதலின் நாங்கள் போர்க் களத்தை விட்டே போய்விடுகிறோம் என்று கூறிவிட்டு, மூவரும் தனித்தனி வழியே சென்றனர். கிருதவர்மா தனது நாட்டிற்குச் சென்று விட்டார். கிருபாச் சாரியார் அஸ்தினாபுரம் போனார். அஸ்வத்தாமா வியாச முனிவருடைய ஆஸ்ரமத்திற்குப் போனான்.

தன் மைந்தன் துரியோதனன் முதலான பல்லாயிரக்கணக்காக வீரர்கள் மடிந்தார்கள் என்ற செய்தியை அறிந்து தம் பெரிய தந்தையான திருதராட்டிரர் வருந்துகிறார் என்ற செய்தியைத் தருமபுத்திரர் அறிந்து, தம் தம்பியரையும், சாத்யகியையும், கண்ணபிரானையும் உடன் அழைத்துக் கொண்டு அவரைக் காணச் சென்றார். துயரத்துடன் இருக்கும் திரௌபதியும் தன்னுடன் இருந்தோரை அழைத்துக் கொண்டு தருமபுத்திரரைப் பின் தொடர்ந் தாள். தருமபுத்திரர் போர்க்களத்தின் அருகில் சென்றவுடன், கோரமான சப்தத் துடன் பெண்கள் அலறிக் கொண்டிருப் பதைக் கண்டார். அன்றில் பேடுகள் அலறுவது போல அவர்கள் அலறிக் கொண்டிருக்கும் காட்சி, பார்க்கச் சகிக்க முடியாததாய் இருந்தது. சிலர் அலறினர்; சிலர் கைகளை மேலே தூக்கித் தரையில் அடித்துக் கொண்டனர். இத்தகைய அவலக் காட்சிகளைக் கண்ட தருமபுத்திரர் மனம் கலங்கி, அவற்றைத் தாண்டிச் சென்று, தன் பெரிய தந்தையான திருதராட்டிரரை வணங்கினார். மற்ற பாண்டவர்களும் வரிசையாகச் சென்று தம் பெரிய தந்தையை வணங்கினார்கள்.

ஒப்புக்காக அழுத திருதராட்டிரர்

புத்திர சோகத்தினால் துயரக்கடலில் ஆழ்ந்த அத்திருதராட்டிரர் ஒப்புக்காக தருமபுத்திரரைத் தழுவிக் கொண்டு அழுதார். தன் பிள்ளைகள் அனைவரையும் கொன்ற பீமன் மேல் மட்டும் ஆத்திரம் அதிகமாக இருந்தது. இதனைப் புரிந்து கொண்டார் கண்ணபிரான். பீமனைத் திருதராட்டிரர் தழுவுகின்ற நேரத்தில் பீமன் போன்ற ஒரு பஞ்சலோகப் பதுமையை அவர் கைகளுக்கு இடையே நகர்த்தினார். தன் அருகிலே நகர்த்தப்பட்ட அப்பஞ்சலோகப் பதுமையைப் பீமன் என்று எண்ணிய திருதராட்டிரர், அப் பதுமையைத் தன் மார்போடு அணைத்துத் தழுவி கொண்டு நொறுக்கினார். அதனால் அவர் கோபம் ஒருவாறு நீங்கியது.

பஞ்சலோகப் பதுமை – துரியோதனன் பீமனிடத்துள்ள விரோதத்தால், தனது மாளிகை வாயிலில் அவன் போன்ற ஒரு பஞ்சலோகப் பதுமையை அமைத்து நிறுத்தி, அதனைப் பலவாறு விகாரமாக அலங்கரித்து, அதன் தலையின் மேல் தான் உப்பரிகையினின்று எச்சிலுமிழ்ந்து, தன் பகைமையையும், கொடுமையையும் காட்டி வந்தானென்றும் அந்தப் பதுமையே இங்கு கண்ணபிரானால் கொடுக்கப்பட்ட தென்றும் கூறுவர்.

திருதராட்டிரர் திருந்துதல்

தான் நன்றாக தழுவி நொறுக்கியதனால், பீமன் நசுங்கி இறந்து விட்டதாகக் கருதிய திருதராட்டிரர், மனம் உடைந்து, “ஐயோ பீமா! போய்விட்டாயா?” என்று கதறினார். அதனைக் கண்ட கண்ணபிரான் திருத ராட்டிரர் கோபம் ஆறியுள்ளது என்றும், உண்மையிலேயே பீமன் இறந்து விட்டான் என்று வருந்திப் புலம்புகிறார் என்றும் அறிந்து கொண்டார். அதனால் அவர் திருதராட்டிரரிடம் சென்று, “அரசே! கவலைப்படவேண்டாம். பீமன் உம்மால் கொல்லப்படவில்லை. நான் வைத்த பீமன் போன்ற பஞ்சலோகப் பதுமையைத்தான் பொடிப் பொடியாய்ப் போகும்படி நொறுக்கினீர்கள். உம்முடைய மனமானது தர்மத்தினின்று விலகிவிட்டது. அதனால் தான் பீமனைக் கொல்ல எண்ணம் கொண்டீர். இனி அத்தகைய தீய எண்ணம் கொள்ளாதீர். மனத்தைச் சாந்தப்படுத்திக் கொள்ளீர்” என்று கூறினார்.

கண்ணபிரான் கூறியவற்றைக் கேட்டவுடன் திருதராட்டிரர் உண்மையை உணர்ந்து, ”எம்பெருமானே! நீர் சொல்வன யாவும் உண்மையே. புத்திரசோகந்தான் என்னை இந்தக் கேடு கெட்ட செயலை செய்யத் தூண்டியது. உன் சமயோசித அறிவால் பீமன் தப்பினான். நானும் குற்றம் புரிவதிலிருந்து தப்பினேன். இப்பொழுது எனக்கு யார் மீதும் கோபம் இல்லை இஃது நிச்சயம் ” என்றார். அதன்பின் பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய அனைவரையும் தழுவிக் கொண்டு ஆசி கூறினார்.

திருதராட்டிரரிடம் விடைபெற்றுக் கொண்டு கண்ணபிரானும், பாண்டவர்களும் காந்தாரியிடம் போனார்கள். அங்கு தம் புதல்வர்களை அழித்த தருமபுத்திரரைச் சபிக்க எண்ணம் கொண்டாள். இந்தத் தீய எண்ணத்தை முன்னமே வியாசர் அறிந்து கொண்டார். எனவே காந்தாரியின் இருப் பிடம் வந்து சேர்ந்தார்.

காந்தாரியின் வார்த்தையைக் கேட்டு பீமன் அச்சம்

நேரே காந்தாரியிடம் சென்று, “பாண்டவர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம். உன் பிள்ளை துரியோதனன் உன்னிடம் ஆசி கேட்க வந்தபோது, “நீ வெற்றி பெறுவாய்” என்று சொல்லாமல் “எங்கே தர்மம் இருக்கின்றதோ, அங்கே வெற்றி நிச்சயம் ” என்று அன்று கூறினாய். அதுதான் இப்பொழுது நடந்ததுள்ளது. தர்மம் வென்றது. அதர்மம் அழிந்தது. தர்மவான்களாகிய பாண்டவர்களைச் சபிக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள் ஆறுவது சினம் அல்லவா!” என்றார். அதற்குக் காந்தாரி, “பெருமானே! பாண்டவர்கள் அழிய வேண்டும் என்று நான் எண்ண மாட்டேன். என்றாலும் பீமன் அதர்மமான முறையில் துரியோதனனைக் கொன்றான். அதனால் அவன் மீது கோபம் ” என்று கூறினாள். காந்தாரியின் இந்த வார்த்தைகளைக் கேட்டுப் பீமன் அச்சங் கொண்டான்.

அப்பொழுது பீமன் காந்தாரியை வணங்கி, “தாயே! நான் செய்தது தர்மமோ. அதர்மமோ எப்படி இருப்பினும் தாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். உயிரோடிருக்குங் காலத்து, துரியோதனன் எங்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டு பெரிதும் கோபம் கொண்டேன். இது உண்மை. உங்கள் தீய குணமுடைய மகனை, அரசவையில் பாஞ்சாலியைத் துகிலுரித்து அவமானப்படுத்திய அன்றே கொன்றிருக்க வேண்டும். எங்கள் அண்ணன் கட்டளையால் கட்டுண்டோம்; பொறுத்திருந்தோம்; காலம் மாறியது. இப்பொழுது எங்களுக்கு உரியது கிடைத்து விட்டது. அதனால் யார் மீதும் எங்களுக்குக் கோபமில்லை” என்றான்.

காந்தாரி பீமன் கூறியதைக் கேட்டு, “பீமா! நீ அன்று அரசவையில் சொன்ன சபதத்தை நிறைவேற்றிக் கொண்டாய் என்பது எனக்குத் தெரியும். என்றாலும் என் மகன்கள் துரியோதனன், துச்சாதனன் விஷயத்தில் நீ அத்துமீறி நடந்து கொண்டாய் என்பது நிதரிசனம். மகனே! எங்களின் நூறு பிள்ளைகளையும் நீயே கொன்றுவிட்டாய். வயது முதிர்ந்த எங்களுக்கு ஊன்று கோலாக ஒரு பிள்ளை யையும் விட்டு வைக்கவில்லை. ஒரே ஒருவனை மட்டும் உயிரோடு விட்டு வைத் திருந்தாலாவது எங்கள் துக்கம் குறைந் திருக்கும். இனி பேசி என்ன பயன்?” என்று கூறினாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here