மகாபாரதம் – 55 -2 ஸ்திரீ பருவம்… திருதராட்டிரர் புத்திர சோகச் சருக்கம்

0
12

ஸ்திரீ பருவம். திருதராட்டிரர் புத்திர சோகச் சருக்கம்

ஸ்திரீ பருவத்தை ‘ஸ்ரீபர்வம்’ எனவும் கூறுவர். இந்தப் பருவத்தில் பெரும்பாலும் பெண்களின் புலம்பலும், அழுகையும், கதறலும் மிகுதியாக இருக்கும். பெண் களின் அவலச் சுவைமிகுதியாக இருப்ப தால் இப்பெயர் பெற்றது எனலாம். கௌரவ, பாண்டவ வீரர்கள் பலரும் மாண்டதைக் கண்டு அவரது பெண்டிர் வீட்டைவிட்டு வெளியே வந்து போர்க் களம் போந்து சோகமுற்றதைக் கூறும் பகுதியாகும் இஃது.

திருதராட்டிரர் தன்னுடைய நூறு பிள்ளைகளும் கொல்லப்பட்டதனால் பெருத்த துயரமுடன் இருந்தார். அப்பொழுது சஞ்சய முனிவன் அங்கு வந்து பல ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான். அவர் மனம் தெளிவுற வில்லை. மாறாக அவர், ”என் நூறு பிள்ளைகளை யும், சகுனி முதலான உறவினர்களையும் இழந்தேன் இனி நான் உயிருடன் இருந்து என்ன பயன்? அன்று கண்ணபிரான் அரசவையில் கூறிய வார்த்தைகளைத் துரியோதனன் சிறிதளவும் காது கொடுத்துக் கேட்கவில்லை. நானும் அவனைக் கட்டுப்படுத்தவில்லை. இன்று அதனால் பெரிதும் துன்பம் அடைந்துள்ளேன்’ என்று வாய்விட்டுக் கூறிக் கதறினார்.

அப்பொழுது சஞ்சயன், “அரசே! பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர்கள் அறிவார்ந்த வார்த்தைகளை ஏற்க துரியோதனன் அன்று மறுத்துவிட்டான். அதனால் போர் வந்துவிட்டது. போரினைத் தடுக்க எந்த ஏற்பாடும் தாங்கள் செய்ய வில்லை. சுயநலத்தின் காரணமாக அத்துரியோதனன் எண்ணப்படி நடந்து கொண்டீர். இப்பொழுது அதன் விளைவினை அனுபவிக்கின்றீர், எல்லாப் பிள்ளைகளையும் இழந்தீர்கள். இருந்தாலும் மனத்தைத்தைரியமாக வைத்துக் கொள்ளும்” என்று ஆறுதல் கூறினான்.

விதுரர் ஆறுதல்

அப்பொழுது தீர்த்த யாத்திரை சென்ற விதுரர் அங்கு வந்தார். அவரைப் பார்த்த திருதராட்டிரர் கதறிக் கதறி அழுதார். உடனே விதுரர், அத்திருதராட்டிரரை நோக்கி, “அரசே! வருந்தாதீர். எல்லா உயிர்களுக்கும் மரணம்தான் முடிவு, நாள் என ஓர் அரிய பொருள் போல உலகிற்குக் காலதேவன் காட்டிக் கொண்டிருப்பது உண்மையில் அது நாள் அன்று. எண்ணிப் பார்த்தோமானால் அது உயிரினை அறுக்கும் வாள் எனத்தெரிய வரும். இதனைச் சான்றோர்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். மேலும் காலத்தை யாராலும் வெல்ல முடியாது. காலத்துக்கு வேண்டியவன், வேண்டாதவன், செல்வந் தன், வறியவன், முதுமையாளன் இளைஞன் என்ற வேறுபாடு கிடையாது. காற்று அடித்தால் மரத்திலுள்ள கிளைகள், பழங்கள், காய்கள், இலைகள், சருகுகள் என எல்லாம் கீழே விழுமோ அதுபோலக் காலம் வாய்த்தால் அனைவரும் எந்தப் பாகுபாடின்றி மாளத்தான் வேண்டும். ஆகையால் உன் பிள்ளைகளும். உறவினர்களும், நண்பர்களும் மாண்டது கண்டு துன்பப்படவேண்டியதில்லை.

“உயிர்கள் எண்ணில் கோடி பிறவிகளை எடுக்கின்றன. புல்லாய், பூண்டாய், பல மிருகமாகி, பாம்பாய், தேவ கணங்களாய், மனித கணங்களாய், பறவையாய் என்ற இத்தியாதி இத்தியாதி பல்வேறு பிறவி களை எடுக்கின்றன என்பர் சான்றோர். அந்த அந்தப் பிறவிகளில், அந்த உயிர்கள் புதுப்புது உறவுகளைப் பெறுகின்றன. மகன் – தந்தை; கணவன் – மனைவி; தாய் மகள் என்ற இந்த சம்பந்தங்கள் இந்தப் பிறவியோடு நீங்குகின்றன. அடுத்த பிறவியில் அவர் யாரோ? நாம் யாரோ? எனவே துக்கத்தை நீக்குவாயாக என்று பலவாறு தேறுதல் வார்த்தைகளைக் கூறினார்.

வேதவியாசர் அறிவுரை

பின்னர், வேத வியாசர், “மகனே! திருதராட்டிரா! எல்லாச் சாஸ்திரங்களையும் நன்கு அறிந்தவன் நீ; தரும நெறிகளை உணர்ந்தவன் நீ; விதியின் காரணமாக உன் மைந்தர்கள் காலதேவன் வாய்க்கு ஆட்பட்டார்கள். அவர்கள் அனைவரும் வீர சொர்க்கம் அடைந்துள்ளனர்; நற்கதி அடைந்த அவர்களைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகின்றாய்? எல்லாக் காரியங் களும் தெய்வச் சங்கல்பத்தின்படியே நடக்கின்றன. எனவே துன்பத்தை விட்டு நிம்மதியாக இரு. இனி, பாண்டவர் களோடு ஒன்றி வாழ்வாயாக; தருமபுத்திரர் அருளுடையவர்; சத்திய விரதன்; அவர் உனக்கு எந்தவிதக் குறையும் வைக்க மாட்டார். இனி பாண்டவர்கள் மேல் உள்ள கோபத்தை விட்டொழி” என்று பலவிதமான தேறுதல் வார்த்தை களைக் கூறிப் பின் மறைந்தார்.

வியாசர் சென்றவுடன் திருதராட்டிரர், மனைவி காந்தாரி, குந்திதேவி, தம்பி விதுரர் முதலானவர்களுடன் தேரேறிக் குருக்ஷேத்திரப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டார். வழியில் நகர மாந்தர் பல்லாயிரவர் திருதராட்டிரரையும், மற்றவர்களையும் கண்டு அழுதனர்; புலம்பினர்; அவர்கள் அலறிய அந்த அழுகையானது நாசமடைந்த அந்த அத்தினாபுரி பெருநகரத்தில் எங்கணும் எதிரொலித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here