மகாபாரதம் – 55 -4 அனைவரையும் வாழ்த்திய காந்தாரி… துரியோதனனைக் கட்டிப்பிடித்து அழுதல்

0
30

அனைவரையும் வாழ்த்திய காந்தாரி

அதன் பின்னர் காந்தாரி, “தருமபுத்திரன் எங்கே உள்ளான்?” என்று கேட்டாள். ‘நான் இங்கே உள்ளேன்’ என்று கூறி, இரண்டு கைகளையும் குவித்துக் கொண்டு வணங்கி எதிரில் நின்றார். வணங்கி எதிரில் நின்ற தருமபுத்திரரைப் பற்றி ஒன்றும் கூறவில்லை; பெரு மூச்சு விட்டாள்; தன் கால்களில் விழும் பொருட்டு அருகில் வந்த தருமபுத்திரரின் கால்களில் பெருவிரலை மட்டும், தன் கண்களை மறைத்துக் கொண்டிருக்கும் பட்டுத் துணியின் அடிப்பக்க இடுக்குகள் மூலம் பார்த்தாள். அவளின் தீட்சண்ய பார்வை பட்டவுடன், அத்தருமபுத்திரரின் கால் நகங்கள் விகாரமான தோற்றம் கொண்டவையாய் மாறின. அதனைக் கண்டு. அர்ச்சுனன் பயந்துவிட்டான். கண்ணபிரான் பின்னால் பதுங்கிக் கொண்டான். “எல்லோரும் தன் பார்வை யைக் கண்டு பயந்து போகிறார்கள்” என்பதை உணர்ந்து கொண்ட காந்தாரி, கோபத்தை விட்டொழித்தாள். எல்லோரையும் அருகில் அழைத்து வாழ்த்தினாள். அன்புடன் பேசினாள்.

பின்னர் காந்தாரியும், குந்திதேவியும், பாஞ்சாலிக்குப் பலவிதமான ஆறுதல் மொழிகளைக் கூறினர். முடிவில் காந்தாரி, ‘பாஞ்சாலி! நீ இனி பெரிதும் துன்பப் படுதல் கூடாது. நானும் உன்னைப் போன்று புத்திரர்களை இழந்தவள்தான். கண்ணபிரான் கூறிய சமாதான வார்த் தையை என் மகன் துரியோதனன் ஏற்காத தால் விதுரர் அன்று கூறியது உண்மையாகி விட்டது. அதாவது போர் ஏற்பட்டு விட்டது. இனி அதைப் பற்றிப்பேசி என்ன பயன்? எங்கள் தவறினால் எம்முடைய குலமே அழிந்தது” என்று கூறி மனம் நொந்தாள். பாஞ்சாலியும் ஒருவாறு ஆறுதல் அடைந்தாள்.

காந்தாரி சாபம்

புண்ணிய புருஷரும் ஞானக் கண் பெற்றவருமாகிய வேதவியாசர், மகன் திருதராட்டிரருக்கும், காந்தாரிக்கும் குரு க்ஷேத்திரப் போர்க்களத்தைக் காண வேண்டி அவர்களுக்கு ஞானக் கண்களைத் தந்தார். அதனால் இருவரும் போர்க்களம் சென்றனர். போர்க்களக் காட்சியைக் காண லாயினர்.

போர்க்களம் அதிபயங்கரத் தோற்றத் துடன் இருந்தது. எங்கு பார்த்தாலும் எலும்புகள், தசைகள், இரத்தம், வீரரின் தலைகள் காணப்பட்டன. யானைகள், குதிரைகள், தேர்கள் போன்றவை இரத்த ஆற்றால் நனைக்கப்பட்டு, எங்கணும் சிதறிக்கிடந்தன. உடலை இழந்த தலைகள், தலையை இழந்த உடல்கள்; வெறும் கைகள், கால்கள், மார்பகங்கள் எங்கணும் பரவிக்கிடந்தன. தரிகள், நாய்கள், கழுகு கள், காகங்கள், பேய்கள் முதலானவை ஊன் வேண்டிய அளவு உண்டு மகிழ்வுடன் திரிந்தன. கணவரை இழந்தோர் உறவினரை இழந்தோர். மைந்தனை இழந்தோர் எனத் எனத் துயருற்ற பெண்கள் குருஷேத்திரப் போர்க்களத்தில் வந்து புலம்பிக் கொண்டிருந்தனர். மாண்டு கிடக்கும் உடல்களை நாய்களும் நரிகளும் இழுத்துச் சென்றன. கழுகுகளும், காக்கை களும் கொத்தித் தின்றன. பேய்கள் உடல் களைச் சுற்றிச் சுற்றி வந்தன.

இவற்றையெல்லாம் ஞானக் கண்க ளைப் பெற்ற திருதராட்டிரரும், காந்தாரி யும் கண்டு மூர்ச்சையாகிப் போயினர். பின்னர் ஒருவாறு மயக்கந்தெளிந்து எழுந்து மனம் கலங்கினர்; புலம்பினர்.

பெண்களின் அழுகையையும் புலம் பலையும் கேட்ட, ஞானக்கண்களால் கண்ட காந்தாரி, கண்ணபிரானை நோக்கி. “மாதவா! கேசவா! வைகுந்தா! கணவனை இழந்த, விரிந்த கூந்தல்களையுடையவர் களாய் அழுகின்ற என் மருமகள்களைப் பார். இறந்து கிடப்பவர்கள், பஞ்சணையில் படுத்துப் பழகியவர்கள். இன்று கட்டாந் தரையில் படுத்திருக்கின்ற அலங்கோலக் காட்சியைப் பார்! அதிரதர்கள், மகாரதர்கள் போன்ற பெரிய பெரிய வீரர்கள் எல்லாம் தேர்கள் கவிழ்ந்தன போலச் சாய்ந்து கிடப்பதைப் பார். ஒற்றை ஆடைதனை உடுத்தி ஒப்பாரி வைக்கின்ற வணங்காமுடி மன்னன் என் மகன் துரியோதனன் மனைவியரைப் பார்! அவர்கள் மார்பிலும், தலையிலும் அறைந்து கொள்ளுகின்ற காட்சியைப் பார். இந்த அலங்கோலங் களையெல்லாம் காண்பதைவிட இறப்பதே மேல்” என்று கூறினாள்.

பின்னர் துரியோதனன் விழுந்து கிடக் கின்ற இடம் தேடிச் சென்று அவனைக் கண்டாள். கண்டவுடன் வெட்டப்பட்ட வாழை மரம்போலக் கீழே சாய்ந்தாள். பின்னர் எழுந்து, பிணமாக விழுந்து கிடக்கும் தன் மகன் துரியோதனனைக் கட்டிப் பிடித்து அழுதாள். மகனே! மகனே! என்று பலமுறை வாய்விட்டுக் கதறினாள்; புலம்பினாள்.

அதன்பின் கண்ணபிரானைப் பார்த்து, “கண்ணா! போர் தொடங்குமுன் துரியோ தனன் என்னிடம் ஆசி கேட்டான். “உனக்கு வெற்றி உண்டாகட்டும்” என்று கூறாமல், “எங்கு தருமம் இருக்கின்றதோ அங்கு வெற்றி உண்டாகும்” என்று கூறினேன். அப்பொழுது மகன் துரியோதனனைப் பற்றி எண்ணவே இல்லை. அதீதமான நம்பிக்கையில் அவ்வாறு செய்தேன் போலும்!

யது குலப் பெண்களுக்கு சாபம் கொடுத்த காந்தாரி

“என் புதல்வர்கள் நூறு பேரையும் பீமன் கொன்றுவிட்டான். பிற மன்னர்களின் முடி அடிதொட வாழ்ந்த என் மக்கள் இன்று புழுதியில் கிடக்கின்றார்கள். பதின் மூன்று ஆண்டுகள் குரு நாட்டை நன்முறையில் ஆண்டவன். வெறுந்தரையில் வீழ்ந்து கிடக்கின்றானே! அவனுடைய மனைவி அழுவதைப் பார்த்தாயா? என் மகள் துச்சளை என்ன பாவம் செய்தாளோ தெரியவில்லை. அவளும் கணவனை இழந்து கதறி அழும் காட்சியைக் பார். எல்லாவற்றிற்கும் மேலாக இவர்களைப் பெற்ற என் வயிறு துடிப்பதைப் பார்” என்று பலவாறு கூறி அழுதாள். பல முறை அழுதாள். துயரம், சினம் ஆகிய இரண்டும் அவள் உள்ளத்தில் மாறி மாறி மோதின. இவற்றிற்கெல்லாம் காரணம் கண்ணனே என நினைத்து, “ஜனார்த்தனா! நீர் நினைத்து இருந்தால் இந்த யுத்தத்தின் பேரழிவைத் தடுத்திருக்கலாம். இவ்வளவு அழிவு ஏற்பட்டதற்குக் காரணம் நீரே. எனவே முப்பத்தாறு ஆண்டுகள் கழித்து நீர் கொல்லப்படுவீர்; இது சத்தியம்; நடக்கும். அப்பொழுது இங்கு தற்போது பரத குலப் பெண்கள் அழுவது போல யதுகுலப் பெண்கள் அழட்டும்” என்று சபித்தாள்.

காந்தாரியின் இந்தச் சாபத்தைக் கேட்டுக் கண்ணபிரான் கோபிக்கவில்லை. வருந்தவில்லை. மாறாக அப்பெருமான். புன்முறுவல் பூத்து, “பட்டத்தரசியே! உன் சாபம் பலிக்கும். நீ சொன்னபடியே நடக்கும். பத்தினிப் பெண் வார்த்தை பழுதாகாது. அதனால் என்னைத் தவிர வேறு யாராலும் அழிக்க முடியாத யாதவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு மடியப் போகிறார்கள். இது நிச்சயம் நடக்கும்” என்று முக்காலும் உணர்ந்த அந்த ஞானி கண்ணபிரான் கூறினார்.

இதனைக் கேட்டுப் பாண்டவர்கள் நடுநடுங்கிப் போனார்கள். பெருந்துயரம் கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here