ராமர் கோயிலுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை: அறக்கட்டளை தகவல்

0
2

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். பூமி பூஜை முடிந்தபின், ராமர் கோயில் கட்டுவதற்கு பக்தர்கள், சாதி, மதம் பாராமல் யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்கலாம் என்று அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், பூமி பூஜைக்குப் பின் கடந்த இரு மாதங்களில் மட்டும் கோயிலுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியதாவது: ராமர் கோயில் அடிக்கல் நாட்டப்பட்டபின், இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பக்தர்களிடம் நன்கொடை வந்துள்ளது. ஏராளமான வெளிநாட்டு கரன்ஸிகளும் வந்துள்ளன. அவை இன்னும் வங்கியில் மாற்றப்படவில்லை. இதேபோல 200 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி மற்றும் விலை மதிப்புள்ள பல்வேறு பொருட்களும் நன்கொடையாக பக்தர்கள் வழங்கியுள்ளனர்.
ராமர் கோயில் கட்டும் பணி விறுவிறுப்பு அடைந்துள்ளது. கோயிலில் பதிக்கப்படும் மார்பில் கற்கள் அனைத்தும் கோயில் பகுதிக்குள் கொண்டுவரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 3 கிரேன்கள், 10 டிரக்குகள், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே அயோத்தி நகராட்சி ஆணையர் விஷார் சிங் கூறுகையில், ‛அயோத்தியில் நடந்துவரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை பக்தர்கள் பார்ப்பதற்காக ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இதற்காக ஐரோப்பாவைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here