கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய புனித தலங்களை கடினமான வானிலையின் போதும் அணுகும் திட்டத்தின் ஒரு பகுதியாக சம்பா நகரில் 440 மீட்டர் சுரங்கப்பாதை தோண்டப்பட்டுள்ளது. எல்லை சாலை அமைப்பினரின் இந்த முயற்சி மிகப்பெரிய சாதனை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார்.
சார்தாம் என்பது பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாகும். ரூ.12 ஆயிரம் கோடி திட்ட மதிப்பில் நான்கு புனித தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத்தை 900 கி.மீ தேசிய நெடுஞ்சாலை மூலம் இத்திட்டம் இணைக்கிறது. 2021 ஹரிதுவார் மகா கும்பமேளாவிற்கு முன்னதாக இப்பணிகளை முடிக்க வேண்டும் என வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன. கங்கோத்ரி மற்றும் பத்ரிநாத் புனித ஆலயங்களுக்கு இடையேயான 250 கி.மீ. பணிகள், எல்லை சாலை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் 17 தொகுப்புகள் உள்ளன, அவற்றில் 151 கி.மீ தூரமுள்ள 10 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 100 கி.மீ சாலை, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வருவதால் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.
தற்போது ரிஷிகேஷ் – தரசு சாலையில் சம்பா நகரத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 94-ல், 440 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை பி.ஆர்.ஓ வெற்றிகரமாக தோண்டியது, கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தேசத்தைக் கட்டியெழுப்பி மிகப்பெரிய சாதனையை புரிந்துள்ளதாக பி.ஆர்.ஓ.,வை நிதின் கட்கரி பாராட்டியுள்ளார். இந்த சுரங்கப்பாதையின் மூலம் போக்குவரத்து விரைவாக நடக்கும். நெரிசலையும் தூரத்தையும் குறைப்பதற்கும், சார்தாம் யாத்திரையில் பயணிகளின் இயக்கத்தை எளிதாக்குவதற்கும் இது நீண்ட கால நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என கூறினார்.
சம்பா சுரங்கப்பாதை கட்டுமானத்தில் நவீன ஆஸ்திரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டேராடூனின் பாரத் கட்டுமானம் வழங்கிய இயந்திரங்களைப் பயன்படுத்தி, இரவு, பகலாக பணிகள் நடக்கின்றன. இதனால் சுரங்கப்பாதை பணிகள் திட்டமிட்டதற்கு மூன்று மாதம் முன்னதாக 2020 அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்கின்றனர். 6 கி.மீ சாலை மற்றும் 450 மீட்டர் சுரங்கப்பாதை ரூ.88 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.