கர்நாடக அரசில் தலைமை மாற்றம் ஏற்படப்போவதாக கடந்த சில வாரங்களாக பேச்சு அடிபடும் நிலையில், இது பற்றி முதல் முறை வெளிப்படையாக பேசியுள்ள முதல்வர் எடியூரப்பா, ‘டில்லி தலைமை கேட்டுக்கொண்டால் பதவி விலகுவேன்’ என கூறியுள்ளார்.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக எடியூரப்பாவை முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்க டில்லி தலைமைக்கு மாநில நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கோவிட் தொற்றை கையாளும் விஷயங்களில் வெளிப்படையாக எடியூரப்பாவை விமர்சிக்கின்றனர். ஊழல் நடப்பதாகவும் சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்களே குற்றம்சாட்டுகின்றனர். இதனால் கர்நாடக அரசில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
சமீபத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வரா மற்றும் ஹூப்ளி மேற்கு எம்.எல்.ஏ., அரவிந்த் ஆகியோர் டில்லிக்கு சென்று எடியூரப்பாவுக்கு எதிராக தலைமையிடம் புகார் செய்தனர். அவரை பதவியிலிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மாநில பாஜ தலைவர் நலின் குமார் மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் எடியூரப்பா முழுமையாக இந்த ஆட்சிக் காலத்தை நிறைவு செய்வார் என்றனர்.
சக்திக்கு மீறி உழைக்கிறேன்!
இந்நிலையில் முதல் முறையாக எடியூரப்பாவே இது பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டில்லி உயர் தலைமைக்கு என் மீது நம்பிக்கை இருக்கும் வரை, நான் முதல்வராக தொடர்வேன். நான் தேவையில்லை என்று அவர்கள் சொல்லும் நாள் வரும் போது நான் ராஜினாமா செய்துவிட்டு, மாநில வளர்ச்சிக்காக இரவும் பகலும் உழைப்பேன். எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். என் சக்திக்கு மீறி அந்த வாய்ப்பை நல்ல விதமாக பயன்படுத்த முயற்சிக்கிறேன். மற்றவற்றை கட்சியின் உயர் தலைமைக்கு விட்டுவிடுகிறேன். மாற்றுத் தலைவர்கள் இல்லை என கூறமாட்டேன். மாற்றுத் தலைவர்களும் மாநிலத்தில் உள்ளனர். ” என கூறினார்.