மகாபாரதம் – 58 செல்வம் உடையோர் உயர்ந்தவரா? சுகமுனிவரின் வரலாறு

0
54

தரும சாத்திர இயல்பு உரைத்தல் சருக்கம்…

மறுநாள் தருமபுத்திரர் வந்து பிதாமகர் பீஷ்மரிடம், “பிதாமகரே! இதுவரை மன்னவரைப் பற்றிக் கூறினீர்கள். மிகுந்த மகிழ்ச்சி” என்று கூறிவிட்டு, “மண்ணவர் எவ்வண்ணம் பிறவியைக் கடந்து நற்கதியைப் பெறலாம், அதனைக் கூறுவாயாக” என்று கேட்டார்.

அதற்குப் பிதாமகர் பீஷ்மர், “தரும் நந்தனா! முற்காலத்தில் மேதாவி என்ற கல்வி அறிவுடையவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். யாவரும் தொழுகின்ற பிராமண குலத்தில் பிறந்தவன் அவன்; அவன் தந்தை ஒருநாள் தன் மைந்தனை நோக்கி, “இந்த இல்லறத்தினால் யாதொரு பயனும் ஏற்படவில்லை; எனவே இந்த இல்லறத்தைத் துறந்து, காட்டிற்குச் சென்று, உண்மையான தவத்தை மேற்கொண்டு உட்பகையாக விளங்கும் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் பொறாமை ஆகிய ஆறினையும் ஒழிப்பேன்” என்று கூறினான்.

இதனைக் கேட்டு மைந்தன், “தந்தையே! மனத்திடமும், உண்மையும் உடையோர் இல்லறத்திலிருந்தே முத்தி பெறலாம். அவையில்லாதார் வனம் சென்றாலும் முத்தி பெறமாட்டார். மேலும் அவர்கள் சாதலையும், பிறத்தலையும் கடக்கமாட்டார்கள். ஆதலால் இல்லறத்தில் தங்கியிருத்தலே சிறந்த அறனாகும்” என்று கூறினான்.

அதனைக் கேட்ட தந்தை மேதாவி அவ்வண்ணமே இல்லறத்தில் இருந்து, ”மேலோர்க்கும் மேலான திலகமாயி னான் ” என்று யாவரும் போற்றும்படி விளங்கினான். ஆதலின் இல்லறத்தில் இருந்தே மண்ணவர் பிறவியைக் கடந்து நற்கதியைப் பெறமுடியும். இல்லறமல்லது நல்லறமன்று அன்றோ என்று பீஷ்மர் கூறினார்.

செல்வம் உடையோர் உயர்ந்தவரா?

(2) அடுத்து தருமபுத்திரர், “செல்வம் படைத்தவர்க்கு, செல்வமில்லாத வறியவர் உயர்ந்தவரா? தாழ்ந்தவரா? கூறுங்கள்” எனக் கேட்டார்.

“செல்வரிடத்துக் காணப்படும் அகந்தை, காம மயக்கம், புகழ், மதம், அச்சம், போன்ற தீக்குணங்கள் வறியோரிடத்துக் காணக்கூடாமையால் அச்செல் வரினும் இந்த இரப்போர் உயர்ந்தோர் ஆவர்” என்று பீஷ்மர் பதில் கூறினார்.

(3) செல்வம் உடையவர் முக்தி அடைவது எவ்வாறு? ” என்று தருமபுத்திரர் கேட்டார்.

“முன்னொரு காலத்தில் துவிஜன் என்னும் பிராமணன் தான் சம்பாதித்த பொருளின் காரணமான ஒரு பயனையும் அடையாமல், ஐம்புலன்களும் கெட்டு, அறிவு இழந்து போனான். பின் நல்ல புத்தி வந்து அவா அறுத்து இறுதியில் மோட்சம் அடைந்தான். அவனைப் போலச் செல்வம் உள்ளவர் பொருள்கள் மேல் அவா அறுப்பின் மோட்சத்தைப் பெறுவர்” என்று பீஷ்மர் பதில் கூறினார்.

(4) “மாந்தர்க்குரிய ஆசார மார்க்கத்தைக் கூறுவீராக” என்று தருமபுத்திரர் கேட்டார்.

”விடியற்காலையில் எழுதல், மல ஜலம் கழித்தல், கை கால் சுத்தம் செய்தல். பற்களைத் தேய்த்துத் தூய்மையாக்குதல், குளிர்ந்த நீரில் நீராடல், தோய்த்த தூய ஆடையைத் தரித்தல், சூரிய நமஸ்காரம் செய்தல் (சந்தியாவந்தனமும் அடங்கும்), வறியோர்க்கு உணவு கொடுத்தல்,வஞ்சனையை நீக்குதல் அதன்மூலம் பிறவிப்பயனை அடைதல் என்பனவெல்லாம் பொதுவான ஆசார நெறியாகும்.

“சப்தம் வராமல் காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி மந்திரங்களை மனத்திலேயே உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரிப் போர் பிரம்மனின் சத்திய லோகத்துக்கு மேலுள்ள பரமபதத்தை அடைவர். இயமம், நியமம், ஆதனம், பிராணா கயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற அட்டாங்க யோகத்தை அறிந்தவர்கள் எண்வகைச் சித்துக்களைப் பெறுவார்கள். இறுதியில் மோட்சமாகிய நல்லகதியைப் பெறு வார்கள்” என்று கூறிய பீஷ்மர், சொல்லு தற்கு இயலாத மந்திர உச்சாடண தியானத்தின் பயனை ஒரு சிறுகதை மூலம் சொல்லுகிறேன் கேள் எனக் கூறலானார்.

தியானத்தால் அடையும் சாரூப்பிய நிலை

கௌசிகன் என்னும் பெயரையுடைய அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் நாளொன்றுக்கு ஆயிரம் தடவை செபம் செய்தலோடு முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்து உயர்ந்த தவத்தைச் செய்து முடித்தான். அப்பொழுது இட்சுவாகு மன்னன் அவனிடம் விருந்தினனாக வந்தான். அவனும் அவனை முகமலர்ச்சியுடன் ஏற்று, உபசாரங்கள் பல செய்து, தான் உச்சரித்த மந்திரத்தின் பலனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான். அதன் காரணமாக இருவர்க்கும் நான்முகன் திருவருளினால் அவன் நான்முகன் முகத்தில் குடி கொள்ளும் பேறுகிட்டியது.'”எனவே செபதியானத்தால் சாரூப்பிய நிலை அடையலாம் என்பது பெறப்பட்டது” என்று கூறினார்.

நிலைத்திரா செல்வமகள்

(5) “செல்வமகள் யாரிடத்திலும் நிலைத்திராள் என்று சொல்கின்றார்களே அதைப்பற்றிக் கூறுக” என்று தருமபுத்திரர் கேட்டார்.

“தேவேந்திரன், பூமிக்கு ஒருநாள் வந்து புனிதமான கங்கையில் நீராடி, மந்திரங் களை உச்சரித்துத் தியானம் செய்து கொண்டு, அந்தக் கங்கை நதிக்கரையில் தங்கியிருந்தான். அதே நேரத்தில் நாரத மாமுனிவரும் சுங்கையில் நீராடி இந்திரனுடன் தங்கியிருந்தார். அந்தச் சமயத்தில் ஓர் அழகிய பெண் ஒரு விமானத்தில் வந்து இறங்கினாள்.

அவளைப் பார்த்து இந்திரனும், நாரதமா முனிவரும் வணங்கி “நங்கையே தீ யார்? எனக் கேட்டனர். அதற்கு அந்நங்கை, “நான் இதுவரையில் அசுரர்களிடம் இருந்து மனம் வெதும்பி இங்கு வந்துள்ளேன். என் பெயர் இலக்குமி” என்று கூறினாள். அதற்கு அவர்கள், “இலக்குமியே! அசுரர் கூட்டத்தை விட்டு இங்கு வந்ததற்குக் காரணம் யாது?’ எனக் கேட்க, அதற்கு இலக்குமி, “அவர்கள் வேதநெறியைக் கைவிட்டனர்; தீய எண்ணங்களைக் கொண் டனர்; உயிர்க் கொலை செய்கின்றனர். மது, மங்கைக்கு அடிமையாகி உள்ளனர். பொய், புறங்கூறுதல் முதலானவற்றைப் பேசுகின் றனர்; அவர்களிடத்தில் இனியும் தங்கியிருத்தல் எனக்கு இழிவாகும். ஆதலின் அவர்களிடமிருந்து வேறுபட்டு உங்கள் பால் இருக்க, இந்தக் கங்கைக் கரையிடத்து வந்தேன்” என்று கூறிய அவள் அணுசொரூபமாய் இந்திரன் தேகத்தில் புகுந்தாள்.

இதனால் செல்வமகள் யாரிடத்தும் நிலை பெற்றிருக்கமாட்டாள் என்பதனை இக்கதை மூலம் பீஷ்மர் தருமபுத்திரருக்கு எடுத்துக் கூறினார்.

நற்கருமம் ஏன் ஆற்ற வேண்டும்?

(6) ‘நற்கருமம் (சுபம்) சீக்கிரம் ஆற்றவேண்டும் என்கிறார்களே அதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன? என்று தருமபுத்திரர் பீஷ்மரைக் கேட்டார்.

விரைவாகச் செய்தல், மெதுவாகச் செய்தல், என உபாயங்கள் இரண்டு வகையாகும். எதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதனைத் தம் சுய புத்தியால் அறிந்து செய்தல் வேண்டும்.விரைவாகச் செய்வதனை ஊக்கத்தினால் செய்து முடித்தல் வேண்டும் சோம்பியிருக்கக் கூடாது.

ஒரு காரியத்தை விரைவாகச் செய்யாமல் தாமதித்துச் செய்தலால் சில சமயம் நற்பயன் விளைவதும் உண்டு அதற்குரிய சிறுகதையைச் சொல்லுகின்றேன் கேள்.

மேதை என்னும் அந்தணன் தம் மனைவி தாமதமாகத் தம் வேலையைச் செய்தமையால் கோபித்து, தம் மனைவியை வெட்டிவிடும்படி தன் மகனிடம் சொல்லிப் போனான். மைந்தனோ தந்தை கட்டளைப்படி நடப்பதா? நடக்காமல் இருப்பதா? தாயைக் கொல்வதா? தாயைக் கொல்லாமல் இருப்பதா? என்று உண்மை தெரியாது இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளித்தான். சென்ற மறையவன் தன் அவசரபுத்தியை எண்ணி, வருந்தி, தன் மனைவியைத் தன் மகன் கொன்றிருப் பானோ என்று எண்ணி வேகமாக வந்தான். வந்து பார்க்கையில் தம் மனைவி நலமுடன் இருப்பதைக் கண்டு பெரிதும் மகிழ் வடைந்தான். மகனின் தாமதத்தால் தாய் பிழைத்தாள். ஆகையால் எந்தக் காரியத் தைச் செய்தாலும் ஆராய்ந்து சிந்தித்துச் செய்தல் வேண்டும். அப்படி சிந்தித்துத் தாமதித்துச் செய்தலால் நன்மை விளையும் என்பதற்கு இந்தக் கதை சான்றாகும். ”ஆனால் சுபகாரியங்கள் செய்யத் தாமதித்தால் இடையில் இடையூறு ஏற்படும். அதனால் சுபகாரியங்களைச் சீக்கிரம் செய்தல் வேண்டும்” என்று பீஷ்மர் பதில் கூறினார்.

அறம் பொருள் இன்பத்தின் பயன் யாது?

(7) அடுத்து தருமபுத்திரர், “அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றினால் மக்களுக்கு உண்டாகும் பயன் யாது?” எனக் கேட்டார்.

அதற்குப் பீஷ்மர், “தருமபுத்திரரே!’ மக்களுக்கு இன்பத்தினால் இம்மைப் பயன் கிடைக்கும்; பொருள் திரட்டுதலினால் இம்மை, மறுமை ஆகிய இருமைப் பயன் உண்டாகும்; அறம் செய்தலினால், இம்மை, மறுமை,வீடு ஆகிய மும்மைப் பயன் உண்டாகும். அறமே மும்மைப் பயனை விளைவித்தலால் உயிர்கட்கு உறுதியாவது அறமே ” எனப் பீஷ்மர் கூறினார்.

(8) ‘நற்காரியம் செய்தும் சிலர் வசை பெறுவது ஏன்?” என்று தருமபுத்திரர் கேட்டார்.

”சிவபெருமான் பார்வதி தேவியோடு கயிலையில் இருந்தான். அப்பொழுது பார்வதி தேவி, சிவபெருமானை வணங்கி, “தாங்கள் ஏன் தக்ஷன் (தக்கன்) யாகத் திற்குப் போகவில்லை” என்று கேட்டாள். அதற்குச் சிவபெருமான், “எல்லா யாகங்களிலும் எனக்குக் கொடுக்கும் ஹவிஸ் பாகம் எனக்குக் கொடுக்கப்படவில்லை. அதனால் போகவில்லை” என்று பதில் கூறினார். உடனே பார்வதி, “சிவபெருமானே! நீர் எண்ணில் கோடி உயிர்களிலும் பெருமை வாய்ந்தவர், குணங்களாலும், வலிமையினாலும், அழகினாலும், யாராலும் வெல்ல முடியாதவர். இத்தகைய முதன்மையான தங்களுக்கு ஹவிஸ்பாகம் கொடுக்கதக்கன் முன் வாராதது எனக்கு அவமானமாயிருக்கின்றது” என்று மனக் கொதிப்புடன் கூறினாள்.

சிவபெருமான் பார்வதியின் அபிப்பிராயத்தை இதன் மூலம் அறிந்து கோபங் கொண்டு, “தக்கன் செய்யும் யாகத்தை அழிக்கும் பொருட்டுத்தம் நெற்றிக் கண்ணினின்று வீரபத்திரன் என்னும் மகனை உருவாக்கினார்.

தக்ஷகன் வேள்வி முடிந்து பிரமன் முதலான தேவர்கட்கு ஹவிஸ்பாகம் கொடுக்கும் போது, வீரபத்திரன் அவ்விடம் வந்து பொறுக்க முடியாத கோபத்தோடு பல ஆயுதங்களை ஏந்தி தக்கனையும், யாகம் செய்வோனையும், தேவர்களையும் வெட்டி வீழ்த்தி சிவபெருமானிடம் போய்ச் சேர்ந்தார்.

அப்பொழுது சிவபெருமான் திருவடிகளில் பிரமதேவன், வணங்கி, ‘பெருமானே! தக்கன் உமக்கு ஹவிஸ் பாகம் கொடுப்பான்; இறந்தவர்க்கு உயிர்தருக” என வேண்ட, பிறைச் சந்திரனைச் சூடிய பெருமானும் தக்கன், யாகம் செய்வோன். தேவர்கள் முதலானவரை உயிர்ப்பித்தான். உயிர் பெற்ற தக்கனும் சிவபெருமான் அருளால் யாகத்தை இனிதுமுடித்து, ஒருமுறை கொடுக்க மறுத்த ஹவிஸ் பாகத்தைப் பலமுறை பணிவோடு அவருக்குக் கொடுத்தான்.

“இதிலிருந்து நல்ல காரியங்களைச் செய்தாலும் அறிவின்றிச் செய்தால் பழியையே பெறுவர்” என்று பீஷ்மர் பதில் கூறினார்.

சுகமுனிவரின் வரலாறு

(9) சுகமுனிவரின் வரலாற்றைப் பிதா மகரே கூறுங்கள் என்று தருமபுத்திரர் கேட்க, பிதாமகர் பீஷ்மர் சொல்லலானார்.

வேதவியாச முனிவர், சிவபெருமான் அருளிய வரத்தினால், அரம்பையின் மேல் மோகம் கொண்டார். அதனால் வெளி வந்த தன் விந்துவை நெருப்பைக் கடைந்தெடுப் பதற்கான அரணிக் கட்டையில் விட, அதன் காரணமாகப் பூரண ஞானம் வல்ல ஒரு புதல்வன் தோன்றினான். வேதத்தில் கரை கண்ட வேதவியாச முனிவர் மனமகிழ்ந்து அக்குழந்தைக்கு, ‘சுகர்’ என்னும் திருநாமத்தைச் சூட்டினார்.

அந்த மைந்தன் சுகருக்கு வேதசாஸ்திரங் களையெல்லாம் ஒதுவித்து நன்றாகத் தெளியவைத்து, பிரபஞ்சத்தின் இயற்கை இயல்பு, பொய்த் தோற்றம், பிரமம் ஆகிய இறைவன் உண்மை (ஒருவனே) என்பன எல்லாவற்றையும் உணர வைத்தும், போதித்தும் அவனுக்குத் தெளிவு ஏற்படாததை வியாச முனிவர் கண்டார்.

மிதிலைக்கு மைந்தனை அனுப்பிவைத்தல்

அதனால் அவர் தன்மைந்தன் சுகரை நோக்கி, “மைந்தனே! மிதிலையை ஆள்கின்ற சனகராஜன்பால் உன் எண்ணங் களைச் சொல்லி உன் சந்தேகங்களை நிவர்த்திச் செய்து கொள்வாயாக” என்று கூறி, தன் மைந்தன் சுகரைச் சனக மகாராஜ னிடம் அனுப்பினார்.

தந்தை சொல் சிரமேற்கொண்டு சுகர் மிதிலைக்குச் சென்றார். வியாச பகவான் மைந்தர் சுகர் வந்துள்ளார் என்பதனை அறிந்து சனகமகா ராஜன் எதிர்கொண்டு வரவேற்று உபசரித்தான். அப்பொழுது சுகமுனிவர், “மன்னரே! உன்னிடத்து இறப் பொடு பிறப்பில்லாத, ஞானயோக நெறியை அறிந்துகொள்ளும் பொருட்டு என் தந்தையாரால் அனுப்பப்பட்டு வந்துள் ளேன். எனக்கு அதனைத் தெளிவுபடுத்தி அருள்வீராக” என்றார்.

அதைக்கேட்ட சனகர், “காய்தல் உவத்தல் அகற்றி, ஆசையையும், அசூயையும் நீக்கி, இன்ப துன்பங்களில் ஒத்திருக்கும் உள்ளத்துரவோனாய், சத்தியத்தினின்று சிறிதும் வழுவாது, தன் ஆத்மாவின் உண்மை சொரூபத்தைப் பெறுவானாயின் அவன் ஞானமார்க்கத்தை இன்னதென தெரிந்தவன் ஆவான்” என்று சொல்ல, சுகர் மீண்டும் தன் தந்தையிடம் வந்து சேர்ந்தார்.

சனகமகாராஜர் சொன்ன உபதேசங்களை யெல்லாம் தன் மைந்தனாகிய சுகர் சொல் லிட கேட்டு, வியாசர்,”மகனே! நன்கு தேர்ந்தனை.இதுதான் ஞானமார்க்கம் என்பது” என்று கூறி மனத்துள் பாசம் மிகுந்து, அவனுடன் கூடி வசித்து வரும் நாளில், ஒருநாள் பிள்ளையாகிய சுகரை ஓர் பால் இருக்கச் செய்து, வியாசர் புனித கங்கையில் நீராடும் பொருட்டுப் போயி னார்.

தன்னை அறிவது எவ்வாறு?

தந்தையாகிய வியாச மாமுனிவர் போனதை பார்த்த நாரதமுனிவர், சுகர் இருக்குமிடம் வந்து, “உன் மனத்திலிருக்கும் ஐயத்தை சொல்வீராக” என்று கூறினார். அதற்குச் சுகமுனிவர் தன்னைத் தான் அறிதல் ஞானம்’ என்று சனகராஜன் சொன்னதையுட்கொண்டு, ‘தன்னைத்தான் அறியும் வகை எவ்வாறு” என வேண்டினார். அதற்குத் தூயோனாகிய நாரதமா முனிவர், ”சுகரே! மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய மூன்று ஆசைகளை நீக்கிய அன்றைய தினமே முத்தி நிச்சயம் ” என்று கூறி அவ்விடம் விட்டு அகன்றார்.

சுகர் மூவாசையை முற்றுமாக துறந்து யோகப் பயிற்சியையும் மேற்கொண்டார். யோகப் பயிற்சியை மேற்கொண்டதனால் சுகர் ஆகாய மார்க்கமாகச் செல்லலானார். அதனைக் கண்ட வியாசர். பிள்ளைப் பாசத்தால் ‘மகனே! மகனே!’ என்று கூவி அழைத்துக் கொண்டே அவர் பின் ஓட. சுகர் பற்று அறுத்தவர் ஆதலின் பதில் சொல்லாமலே போகவும், அங்குக் காட்டிலிருந்த செடி கொடி, மரங்கள் எல்லாம் அவர் (சுகர்) கேட்பது போல, ‘ஏன்… ஏன்’ என்று எதிரொலி எழுப்ப, அது கேட்ட வியாசர், ‘சுகர் வேறு; இந்தத் தாவரங்கள் வேறு’ என்றில்லாமல், எல்லா ஒரே ஒன்றாய் (ஏகமாய்) இருக்கும் தத்துவ நிலையை கண்டு ‘ஏகம்சத்’ எனச் சந்தோஷம் கொண்டார். சந்தோஷத்தில் மூழ்கிய வியாச பகவான் முன் சிவபெருமான் உமையம்மையோடும் திருமாலோடும் தோன்றியருள் செய்ய லானார். (சிவபெருமான் உமையம்மை யோடு ரிஷப வாகனத்திலும், திருமால் கருட வாகனத்திலும் தோன்றினார்கள் என்க) தன் திருவடிகளை வணங்குகின்ற வியாசரை நோக்கி சிவபெருமான், “வியா சரே! நீ மாயையை வெல்லும் படியான மைந்தனைக் கேட்டாய். அவ்வாறே கொடுத்தோம். அந்த மைந்தன் பரிபூரண ஞானம் எய்தி மேருமலைக்கு அப்பாலுள்ள வடக்கு திக்கினில் தவம் செய்யச் சேர்ந்தான். எல்லாக்கலை ஞானங்களையும் உணர்ந்தவனான நீயோ உன் மகனுக்காக உலக மக்களைப் போலத் துன்புறலாமோ? துன்புறாது மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள் ” என்று கூறி மறைந்தார். வியாச மாமுனிவனும் மயக்கம் நீங்கி தன் இருப்பிடம் சேர்ந்தார்.” என்று எனக்கு நாரதமாமுனிவர் இந்த சுகர் முனிவர் கதையை கூறினார்” என்று பீஷ்மர், சுகர் முனிவர் கதையைத் தர்மபுத்திரருக்குக் கூறினார்.

எவ்வுலகத்தோரும் பரகதியை (முத்தி) அடைவதற்கு ஆன அறம் ஒன்றைத் தெரிவிக்க வேண்டும் என்று தர்மபுத்திரர் பிரார்த்திக்க, பிதாமகர் பீஷ்மர் பிருகுமறை யோன் கதையின் மூலம் அதனைப் பெறவைக்கலானார்.

பிருகு மறையோன் கதை

“ஒருமுறை இந்திரன் நாரதரை நோக்கி, “உன் கவலையில்லாத மனத்தில் மறக்க முடியாத சிறந்த அதிசயம் எது என்பதைக் கூறுக” என வேண்டினான். அதற்கு நாரதர், “முன்னொரு காலத்தில் பிருகு என்னும் பிராமணன் ஒருவன் இருந்தான். அவன் உண்மையை விரதமாகக் கொண்டிருப் பவன்; நற்குணங்கள் பலவுடையவன்; அத்தகையவன் அக்கினி சாட்சியாக ஒரு நற்குணமிக்க மங்கையை மனைவியாக மணந்து கொண்டு நல்ல பிள்ளைகளையும் பெற்றான். குபேரனைப் போலப் பொருளையும் சேர்த்தான். அத்தகையவன் பிறப்பு இறப்பு என்று மாறி வருதல் இல்லாதபடி செய்யக்கூடிய தர்மம் யாது?” என்று ஆராய்ந்து வரலானான்.

ஒருநாள் ஒரு முனிவன் தன்னிடம் வர அவனை வரவேற்று, பின்னர் ஆர்வத்தோடு தன்னுடைய ஐயத்தை பிருகு என்னும் அப்பிராமணன் கேட்க, அம்முனிவன், ”பிருகுவே ! நீ கேட்கக் கூடிய தர்மம் வருணாசிரம தர்மவழி நடத்தல் என்பர் சிலர்; சிலர் உண்மை பேசுதல் என்பர்; விருந்தோம்புதல் என்பர் வேறு சிலர். மற்றும் சிலர் கொல்லாமையையும், புலால் மறுத்தலையும் கடைப்பிடித்தல் என்பர்; இவ்வாறு பலர் பற்பல விதமாகக் கூறுவர். அதனால் நைமிசாரணியத்தில் கோமதி நதிக்கரையில் தாமரைக் குளத்தருகில் தங்கியிருப்பவன்; அனைவர்க்கும் நல்லவன். நாகர்கட்கு அரசன்; பதுமன்’ என்னும் பெயரினன்; அவனிடம் சென்று உன் ஐயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்” என்று கூறி அந்த முனிவர் போய் விட்டார்.

முனிவர் கூறியபடியே பிருகு என்னும் அந்த அந்தணன் பதுமன் மனைக்குச் சென்றான். அவன் சென்ற காலத்து, பதுமன் அங்கு இல்லை. அவன் மனைவி வரவேற்றுச் செய்த உபசாரங்களைப் பெற்றபின், பிருகு, “நின் கணவன் எங்கே? சொல்வாயாக” என்று கேட்டான். அதற்கு, அவள் அமைதியாக, “அவர் (பதுமன்) சூரியன் பக்கம் சென்றுள்ளார். இன்று எட்டாம் நாள் வருவார்” என்று கூறியபின், தன் இல்லத்தில் அமுதுண்ணும்படி கேட்டுக்கொண்டாள். கேட்டுக்கொண்டாள். அதற்குப் பிருகு என்னும் அந்த அந்தணன், “நின் கணவன் வந்த பின் ஒன்பதாம் நாள் நின் இல்லத்தில் அமுது உண்பேன். அதுவரை நின் கணவன் வருகையை எதிர்பார்த்துப் பக்கத்துக் காட்டினில் வாழ்ந்து வருகின்றேன்” என்று சொல்லி நைமிசாரணியக் காட்டில் வாழ்ந்து வந்தான். நைமிசாரணியம் என்பது ஆழ்வார்களால் மங்களா செய்யப்பெற்ற நூற்றெட்டுத் திவ்வியத் தலங்களில் ஒன்றாகும் என்பதை இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

முனிவரைத் தேடி பதுமன்

பதுமன். அவன் மனைவி குறிப்பிட்டபடி எட்டாம் நாள் வந்து விட்டான். தன் மனைவி மூலம் பிருகு அந்தணன் வந்து போனதை அறிந்தான். எனவே அவன் அந்த அந்தணர் இருப்பிடம் சென்று,”பெரியீர், அடியேன் இல்லத்தின் கண் தாங்கள் எழுந்தருளினதற்குக் காரணம் யாதோ?” என வினவினான். அதற்குப் பதுமன், ‘பிருகு அந்தணரே உன்னிடத்து வந்த காரியத்தைப் பின்னால் சொல் கிறேன். நீ சூரிய மண்டலத்திற்குச் சென்றி ருந்தாய் என்று அறிந்தேன். அந்த மண்டலத் தின் சிறப்பையும், அதன் விரைவு கதியையும், அச்சூரியனின் மதிப்பையும், அம்மண்டலத்தில் காணப்படும் அற்புதத் தையும் எனக்கு எடுத்துக் கூறுவாயாக” என்று கேட்டுக் கொண்டான்.

அதனைக் கேட்டுப் பதுமன். “அந்தணரே! சூரிய மண்டலத்தில் பல வாத்தியங்கள், நான்கு வேதங்கள் ஆகியவற்றின் பேரொலி கடல் அலை போல் ஆரவாரிக்க, தேவலோகத்து அரம்பையர்கள் நடனம் செய்ய, அருணன் சாரதியாய் செலுத்த, விரைந்து செல்லும் நடையினைக்கொண்ட ஏழு குதிரைகள் ஒரு கண நேரத்தில் பல காததூர வழிகளைக் கடந்து ஓடும்படியான ஒற்றைச் சக்கரத்தை கொண்ட தேரின் மேல் ஏறி, பூமியை மியை பிரதட்சணம் செய்து வரும் ஆயிரங் கிரணங்களையுடைய சூரியனது உடலில் மும்மூர்த்திகள் விளங்குகின்ற சோதியாய்த் திகழ்வர். என்றால் அத்தகைய சூரிய நாராயணனையன்றி உயிர்கட்கு இனிய கடவுள் வேறில்லை” என்று சொல்லும் பொழுது சூரியனோடு ஒருவன் கலந்தான். அதைக் கண்ட பதுமன் சூரியனை நோக்கி,”நின்னொடு இப்பொழுது கலந்தவன் யார்? சொல்லுங்கள்” என்று கேட்டான்.

அதற்குச் சூரியன், “அவன் ஓர் அந்தணன்; ஆசாபாசங்கள் இல்லாதவன். உடலை நீத்து என்னுள் ஒன்றிக் கலந்து ஏகமானான் ” என்று கூறிய அச்சூரிய பகவான், “ஆசா பாசங்களை அறுத்தலே சிறந்த அறமாகும் ‘ என்று சொல்லிப் போனான் என்றான். பின் அப்பதுமன் பிருகுவை தன்மனைக்கு அழைத்தான்.

அதனைக் கேட்டு பிருகு, “பதுமனாரே! நான் உன்னிடம் வந்தது இந்த விஷயத்தை ஆசாபாசங்களை அறுத்தலே சிறந்த அறமாகும் என்பன போன்றவை அறிந்து கொள்வதற்காகத்தான் எனவே இப்பொழுது என் சந்தேகம் தீர்ந்தது என்று கூறி விட்டு பிருகு அந்தணன் பதுமன் இல்லத்திற்குச் சென்றான். பதுமன் தம்பதிகளால் நன்கு உபசரிக்கப்பட்டு, விருந்துண்டு தன்னிருப்பிடம் சேர்ந்தான். அந்தப் பிருகு அந்தணனும் தனக்கென நிர்ணயித்து வைத்துள்ள சில நாட்களில் ஆசாபாசங்களை நீக்கி, இல்லறத்திலொழுகி, நீரும் உப்பும் ஒன்றாவது போல சூரிய ஒளியில் கலந்து போனான். இதனை நீ தெரிந்து கொள்வாய் ” என்று நாரத முனிவர் கூற இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். நாரதரால் இதனை நான் உணர்ந்து கொண்டேன். நீ இதனை மனதில் பதிய வைப்பாயாக ” என்று கங்காபுத்திரன் ஆகிய பீஷ்மர் தர்மபுத்திரருக்குச் சொல்ல அதனைக் கேட்டு மனங்கனிந்து தான் பின்மறுநாள் காலை வருகிறோம் என்று சொல்லி தர்மபுத்திரர் முதலாய அனைவரும் அஸ்தினாபுரிக்குச் சென்றனர்.

மகாபாரதம் – 58 செல்வம் உடையோர் உயர்ந்தவரா? சுகமுனிவரின் வரலாறு | Asha Aanmigam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here