திலம் – எள்ளு; உதகம் – நீர். எனவே பிதிரர் பொருட்டு எள்ளும் தண்ணீரும் கலந்து இருக்கும் நீர்க்கடனைச் சொல்லு தலே. திலோதக சருக்கம் ஆகும்.
காந்தாரியின் சாபத்தையெல்லாம் ஏற்றுக் கொண்ட கண்ணபிரான் சிறிதும் கோபப்படாது, “அத்தையே! எழுந்திரு! துயரம் கொள்ளாதே. தீய குணமுடைய துரியோதனனுக்காக இவ்வளவு வருத்தம் கொள்ளத் தேவையில்லை. உன்னைப் போன்ற அரச குலப் பெண்கள்தான் இத்தகைய தீயவர்களைக் கர்ப்பத்தில் தாங்கிப் பெற்றெடுக்கின்றனர். அதற்கு யார் தான் என்ன செய்ய முடியும்?”என்று கூறினார். காந்தாரி ஒன்றும் பேசவில்லை. சோகத்தால் கண்கள் கலங்கின; மௌனம் காத்தாள்.
அப்பொழுது திருதராட்டிரர் தரும புத்திரரைப் பார்த்து. “தருமா! இப்போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்கள் என்ன கதி அடைந்தனர்?” எனக் கேட்டார்.
அதற்குத் தருமபுத்திரர், “அரசே! இப்போரில் எழுபத்தாறாயிரம் கோடி வீரர்கள் மாண்டனர். ஆயிரக்கணக்கான வீரர்கள் காணாமல் போயினர். கெளரவர்கள் சொர்க்க லோகத்தை அடைந்தனர்” என்று கூறினார். அதன்பின் அவர் இறந்த வீரர்களை நல்லடக்கம் செய்ய உத்தர விட்டார். அவருடைய கட்டளையை ஏற்று, தௌமியர், சஞ்சயன், விதுரர் போன்றோர் நல்லடக்கத்துக்குரிய ஏற்பாட்டைச் செய்யலாயினர். சந்தனம், அகில் போன்ற மணமுள்ள மதிப்புமிக்க கட்டைகளை அடுக்கினர்; அவற்றின் மேல் பிணங்களை வைத்து வெண்பட்டினால் மூடினர். நெய்யினை ஊற்றி எரியூட்டினர். இவ்வாறு தகனம் செய்தபின் முறைப்படி செய்ய வேண்டிய ஈமக்கடன்களை உரியவர்களைக் கொண்டு செய்வித்தனர். அதன்பின் திருதராட்டிரரை அழைத்துக்கொண்டு தருமபுத்திரர் கங்கை நதிக்குச் சென்றார்கள். புனித கங்கையில் நீராடினார்கள். உற்றார், உறவினர், நண்பர்களுக்கு நீர்க்கடன் செலுத்தினர்.
கர்ணன் வரலாற்றை முழுமையாகக் கூறிய குந்தி தேவி
அப்பொழுது குந்திதேவி அழுது கொண்டே, ”என் மூத்த மகன் கர்ணனை விட்டுவிடாதீர்கள். அவனுக்குரிய தீர்க் கடன் செய்யுங்கள். அவன் உங்களின் மூத்தவன். என் கன்னிப் பருவத்திலே சூரியன் அருளாலே பிறந்தவன். உலக அபவாதத்திற்கு அஞ்சி, பெட்டியில் வைத்து, கங்கையில் நான் அனுப்பி விட்டேன். அதனை அஸ்தினாபுரத்து தேர்ப்பாகன் அதிரதன் கண்டு, பெட்டியில் குழந்தையிருக்கக் கண்டு மகிழ்ந்து தன் மகனாகவே வளர்த்தான்” என்று கர்ணன் வரலாற்றை முழுமையாகக் கூறினாள். இதனைக் கேட்டுப் பாண்டவர்கள் பெரிதும் துன்பம் அடைந்தனர்.
தருமபுத்திரர் மனங்கலங்கித் தாயின் மேல் கோபங்கொண்டு, “அம்மா! தான வீரன் கர்ணன் எங்களுடைய தமையன் என்பதை இவ்வளவு காலம் மறைத்து விட்டாயே! குருகுல நாசத்திற்கு இன்று நீயே காரணமானாய். இந்த இரகசியம் மறைக்கப்பட்டதால் நாங்கள் பெரிதும் துன்பம் அடைந்துவிட்டோம். உற்றார். உறவினர் மாண்ட துக்கத்தைவிட, அண்ணன் கர்ணன் எங்களுடைய கையால் மாண்டது கொடுமையான துக்கமாக உள்ளதே?” என்று கூறி அந்தத் தமையன் கர்ணனுக்கும் நீர்க்கடன் செய்தார்.
பின்னர் தாயிடம், “தாயே! உடன் பிறந்த அண்ணனை உங்களால். நாங்கள் அண்ணன் என்று அறியாமல் கொன்று விட்டோம்; அதனால் இனி எந்த ரகசியமும் பெண்கள் மனத்தில் தங்காமல் இருக்கட்டும்” என்று கூறினார். பின்னர் அனைவருடனும் கங்கைக் கரையைச் சேர்ந்தனர்.
திருதராட்டிரரும் அவரைச் சார்ந்தவர்களும், பெண்கள் அனைவரும் பவளம் போன்ற செஞ்சடையையுடைய தெளமிய முனிவர், வேதங்களை வகுத்த வியாச முனிவர், காரக முனிவர், மற்றும் அந்தணர்கள் அனைவரும் கங்கையில் இறங்கிப் புனித நீராடிக் கரையேறினார்கள். கங்கையில் படிந்த அனைவரும் கங்கை யைத் தியானித்தும் நிலமகளை வணங்கியும் உயர்ந்த மேட்டினை அடைந்தனர். பின்னர் பெண்கள் எல்லோரும் மலர் களைச் சூடி கூந்தலை முடித்திட்டனர்.
கூந்தலை முடித்திட்ட பாஞ்சாலி
வியாசர், தௌமியர் போன்ற முனிவர்களும், கண்ணபிரானும் தருமபுத்திரரும் ஏனையோரும் திரௌபதியைப் பார்த்து, ”நீ அன்று துரியோதனன் அரசவையில், தனிப்பட எடுத்துக் கூறிய வஞ்சினம் இனிது நிறைவேறிற்று. இனிமேல் கூந் தலை முடித்திடலாம்” என்று கூற, தனது மாமியாராகிய குந்தி, காந்தாரி போன்றோர் தனது கூந்தலைத் தொட்டு முடிக்கவரும் முன்னமே ‘தானே முடிப்பதாகச் சபதம்” செய்தாள். ஆதலின் தன் கூந்தலைத்தானே கூட்டிமுடித்து முடிச்சிட்டாள்.
அப்பொழுது தேவர்கள் பூமாரி பொழிந்து அவளது மேன்மையை வாழ்த்தினர். மற்றவர்களும் மனமகிழ்ந்தனர்.
குற்றமற்ற தருமன் உத்தரகிரியைக் காண வருவோர்க்குத் தங்குமிடங்கள் ஏற்படுத்தி, கற்களைப் புதைத்துச் செய்ய வேண்டிய வாஸோக, திலோதக, பிண்டோதக, கிரியைகளைச் சரிவரச் செய்து நிறைவேற்றி னான். இறந்தவர்கள் நல்ல கதியை அடைவதற்காக பெரியோர்கள் சாத்திரங் களில் கூறியுள்ளபடி பன்னிரண்டு நாட்களி லும் இந்த விதமான கிரியைகளைச் செய்து முடித்து, ஊன்றிய கற்களை எடுத்து, அனைவரும் கங்கை நீரில் மூழ்கிவர தருமபுத்திரர் குறைவில்லாது பல தான தருமங்களைச் செய்தார்.
வேதத்தில் கூறியுள்ளபடி ஓமம் வளர்த்து எள்நீர் சிந்தி,ஆலமரத்தில் நல்ல அடிவேர்ப் பகுதியில் பித்ருக்களுக்குப் பிண்டங்கள் சமர்ப்பித்து, மனமாறுபாடு இல்லாத தருமபுத்திரர் சூதகம் தீர்ந்து, (ஆசௌசம்) பெற்றோர்களின் மலர் போன்ற திருவடிகளை வணங்கினார். அதன்பின் தருமபுத்திரர் அந்தணர் களோடும், அரசர்களோடும், கண்ணபிரானோடும், மனப்பூர்வமான விசுவாசத்தோடு உள்ளம் நெகிழ்ந்து வாழ்ந்து வந்தார்.
சாந்தி பருவம், திருமுடி புனைந்த சருக்கம்
அமைதியைப் பற்றிக் கூறும் பருவமே சாந்தி பருவமாகும். பதினெட்டு நாட்கள் போரில் ஏற்பட்ட உள்ளக் குமுறல்களும். மனக்குழப்பங்களும், சோகங்களும், சமனாகி, இறந்தோர் பலர்க்கு உத்தர கிரியைகளைச் சரிவர நடத்தி, கங்கா நதிக்கரையில் மூன்றுமாதம் தங்கியிருந்து பின்னர் அத்தினாபுரிவந்து, தருமபுத்திரர் திருமுடி சூட்டப்பட, அவர் அரச நீதிகளையும் தருமசாத்திர முறைகளையும் உணர்ந்து எங்கும் சாந்தி நிகழும்படி செய்த பருவம் ஆகும்.
கங்கா நதி தீர்த்தத்தில் யாவர்க்கும் செய்ய வேண்டிய கடன்களைச் செய்தபின், தருமபுத்திரர் முதலாயினோர். அக்கங்கை நதி தீரத்திலேயே மூன்று மாதம் தங்கி யிருந்தனர். அப்பொழுது அங்கு வியாச மாமுனிவர் வந்தார். அவரைப் பாண்ட வர்கள் எதிர்கொண்டு வணங்கி வரவேற் றனர்.”அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்னும் உண்மைத் தத்துவத்தை உன்னிடம் கண்டோம். பசுமை நிறம் பொருந்திய கண்ணபிரானின் திருவருளால் விரோதிகளை வென்று இந்தப் பூவுலகத்தை உன்னுடையதாக அடைந்தாய். இனிமேல் அத்தினாபுரி சேர்ந்து அனைவரும் புகழும்படி அரசாட்சி செய்வாயாக” என்று கூறினார்.
கர்ணனின் பிறப்பு இரகசியம்
தருமபுத்திரரோ அவர் கூற்றை ஏற்காது. ”பெருமானே! அபிமன்யு முதலான அருமருந்தன்ன பிள்ளைகளையும், திட்டத் துய்மன் முதலான அன்பு பொருந்திய மைத்துனர்களையும், ஏனைய நெருங்கிய உறவினர்களையும் இந்தக் குருக்ஷேத்திரப் போரில் இழந்தோம். படைவீரர்கள் ஆயிரக் கணக்கில் மாண்டனர். இரு பக்கமும் துணைவந்த அரசர்களெல்லாம் மாண்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் தாய் குந்தி தேவி முதன் முதலில் பெற்ற எங்கள் தமையன் தானவீரன் கர்ணனைக் கொன்ற பின் நாங்கள் அடையப் போகின்ற பயன் தான் என்ன உள்ளது?” என்று வருத்தத் துடன் கூறிய அவர், அருகிலிருந்த நாரதரைப் பார்த்து,”எங்கள் தமையன் கர்ணனைப் பற்றி எங்கள் தாய் முழுமையாகச் சொல்லவில்லை. தாங்கள் அவனுடைய வரலாற்றைக் கூறுக” என்று கேட்க நாரதர் கர்ணனின் பிறப்பு இரகசியத்தை எடுத்துக் கூறலானான்.
“உங்கள் தாயார் குந்தி தேவி, குந்திபோஜன் அரண்மனையில் கன்னியா யிருக்கையில் துர்வாச முனிவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தைக் கொண்டு சூரியனுடைய அருளால் கவச குண்டலங்களோடு கூடிய ஓர் ஆண் மகனைப் பெற்றாள். உலக அபவாதத்திற்கு அஞ்சி குந்திதேவி அக்குழந்தையைப் பொற் பெட்டியில் வைத்துக் கங்கையாற்றில் விட்டாள். கங்கையாற்றில் மிதந்து வந்த அப்பெட்டியை அஸ்தினாபுரத்துத் தேர்ப் பாகன் அதிரதன் என்பான் எடுத்து, பெட்டி யிலுள்ள குழந்தையை, ‘கர்ணன்’ எனப் பெயரிட்டுத் தன் குழந்தையென வளர்த்து வரலானான்.
“பரசுராமரிடத்தில் சிறந்த வில் வித்தை யைக் கற்ற அவன் ‘தான் ஒரு பிராமணன்’ என்று பொய்யாகக் கூறியதால், கோபங்கொண்ட அப்பரசுராமர், “சமயத்தில் அந்த வித்தை மறந்து போகக் கடவது” என்ற சாபத்தைத் தந்தார். பின்னர் துரியோ தனனின் உற்ற நண்பனானான். சமூகத்தில் அவன் அந்தஸ்து உயரவேண்டுமென்பதற்காகவே துரியோதனன் தன் நண்பன் கர்ணனை அங்க நாட்டு அதிபதியாக்கினான். அதன் காரணமாக அங்க நாட்டு அதிபதி ஆனான். கலிங்கநாட்டு மன்னன் மகள் சுபாங்கி என்பவளின் சுயம்வரத்தில், தன்னை எதிர்த்துப் போரிட்ட மகத நாட்டு மன்னன் சராசந்தனை வெற்றி கொண்டான். அதனால் துரியோதனன் அந்தச் சுபாங்கியைக் கைப்பற்றிக் கொண்டு அஸ்தினாபுரம் புகுந்தான்.
சுவச குண்டலங்களைத் தானமாக கொடுத்த கர்ணன்
கடைசி காலத்தில் தன் தேர், யுத்தகளத்தில் புதையும் எள ஒரு முனிவன் தையும் பெற்றான். மூலம் ஒரு சாபத்தையும் எல்லாவற்றிற்கு மேலாகத் அவன் உடலோடு பிறந்த கவச குண்டலங்களைத் தேவேந்திரன் யாசகமாகப் பெற்றுப் போனான். அதுமட்டுமா! நாகாஸ்திரத்தை ஒரு முறைக்குமேல் இரண்டாவது தடவை விடக்கூடாதென்று அவனைப் பெற்ற அன்னை – குந்தி தேவியே வரங்கேட்டுப் பெற்றாள் – உயிர் விடும் தருவாயில் தன் புண்ணியம் அனைத்தையும் வேதியனாக வந்த கண்ணபிரானுக்குத் தானமாகக் கொடுத்தான் – இவற்றின் மூலம் அவன் ஒரு மாபெரும் வள்ளலாக உயர்ந்தான். எத்தனை இடையூறுகள்! எத்தனை துன்பங்கள்! எத்தனை சோதனைகள்! அத்தனை துன்பங்களையும் இடை யூறுகளையும் சந்திக்க நேர்ந்ததால்தான் தம்பி அர்ச்சுனனால் அவனை ஜெயிக்க முடிந்தது! உண்மையில் கர்ணனை வெல்லக் கூடியவர்கள் இப்பூவுலகில் யாரு மில்லை” என்று கூறினார்.
நாரதர் கூறியவற்றையெல்லாம் கேட்ட தரும புத்திரர் மனம் நொந்து அன்னை குந்தி தேவியைக் கோபிக்கலானார். “இனி பெண்களின் மனத்தில் ரகசியம் தங்கக் கூடாது” என்று ஒரு சாபம் தந்தார். அதன் மூலம் அவர் மாதர் குலத்தையே சபித்தது போலாகிவிட்டது!
சகோதரர்களின் கூற்றை ஏற்காத தர்மர்
அதன்பின் தருமபுத்திரர் அர்ச்சுனனை நோக்கி, “அர்ச்சுனா! இவ்வளவு நடந்த பின்னும் நான் நாடாள வேண்டுமா? அதைவிட காடு செல்வதே மேல்; அங்கே யாவது நிம்மதியாகத் தவம் செய்யலாம்” எனவே “பார்த்தனே! நற்பண்புகளை யுடையவன் நீ. ஆகையால் நீயே ஆட்சியை ஏற்பாய்; நான் காட்டில் தவம் செய்யச் செல்கின்றேன்” என்றார்.
அதனைக் கேட்ட பீமன், “அண்ணா! நீங்கள் கூறியது நல்ல யோசனையாகத் தெரியவில்லையே போர்க்களத்தில் பகைவரை வெட்டிக் கொல்லுதல் என்பது பாவமாகாது. அஃது பாவம் என்று கருதுவீரானால் யாகம் செய்து பரிகாரம் செய்து கொள்ளலாம். அதன்பின் ஆட்சிக் கட்டிலில் அமரலாம்” என்றான். பீமார்ச்சுனர்கள் கூறியன தருமபுத்திரர் கருத்துக்கு இசைவாயில்லை.
அதனால் நகுல சகாதேவர்கள். “அண்ணா! பின்னர் ஏன் செய்தோம் என்று வருந்தும்படியாக, எந்தக் காரியத்தையும் செய்தல் கூடாது. மாறாக சிந்திக்காது செய்துவிட்டால் ‘ஏன் செய்தோம்’ என்று பின்னர் வருத்தப்படக்கூடாது. அன்னை குந்தியால் ஏற்பட்ட தவற்றுக்குக் காட்டில் சென்று தவம் செய்யப் புகுதல் பரிகாரம் ஆகாது. அதனால் பெருமையும் கிட்டாது. எனவே குலமுறைப்படி மூத்தவராகிய தாங்களே இந்நாட்டை ஆளுதல் சிறந்த தாகும்” என்று கூறினார்கள். அதன்பின், பாஞ்சாலி,தருமபுத்திரரை வணங்கி, “போரில் வெற்றிக் கனி பறித்த அரசரே! போர் செய்தவர்கள் யாகம் செய்தால் நல்ல பலன் அடையலாம் என்று மனு நூல் கூறுகின்றது எனச் சான்றோர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆகலின் கண்ண பிரானிடம் இதனைக் கேட்டு உறுதி செய்து கொண்டு அவ்வாறே செய்வீராக” என்று கூறினாள்.
சகோதரர்கள் கூறியதையோ, பாஞ்சாலி கூறியதையோ தருமபுத்திரர் ஏற்கவில்லை. அதனால் தருமபுத்திரர் மனக் குழப்பங் களை நீக்க குந்திதேவி, காந்தாரி, திருதராட்டிரர், விதுரர் முதலானோர் பல கருத்துக்களைக் கூறினர். அவற்றையும் தருமபுத்திரர் ஏற்கவில்லை. அப்பொழுது வியாச பகவான், “பன்னிரெண்டு ஆண்டுகள் காட்டில் வாசம் ாசம் செய்தபின், ஓராண்டு அஞ்ஞாதவாசம் செய்தபின் நீ கொடிய போரினை வெறுக்காது அதனைச் செய்து முடித்தாய். அதனால் நாட்டை நீ ஆளுதல் வேண்டும். அதுதான் சரியான வழி. அவ்வாறு இருக்க இப்பொழுது காடு செல்வேன் எனக் கூறுவது ஏன்?” என்று கேட்டார்.
தருமபுத்திரர், “பெருமானே! பொது வாக மன்னர்கள் பகைவர்களை வெற்றி கொண்டபின் அவர்கள் நாட்டையும் சேர்த்து ஆள்வர் என்பது உண்மைதான்.
அது சரியான முறையும் கூட. ஆனால் எங்களுக்கு அது பொருந்தாது. ஒரு குலத்தில் பிறந்த, ஒரே வீட்டில் வாழ வேண்டிய எங்கள் தமையன் கர்ணனைக் கொன்றபின் அரசாள்வது தகுதியாகாது. காடு புகுதலே நன்று” என்று மீண்டும் கூறினார்.
அதனைக் கேட்டு வியாசபகவான், ”அரசே! நீர் சொல்வது எனக்குப் புரிகின்றது. என்றாலும் நான் சொல்வதைச் சிறிது கேட்பாயாக, அவரவர் செய்கின்ற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ற பரிகார மாய், இறைவன் சாட்சியாய் நின்று மறு பிறவியை நிர்ணயிக்கிறான். சாவு என்பது இன்னாரது முன்னிலையில் என்று அவனால் விதிக்கப்படுகின்றது. ஆகையால் ‘போரில் நான் கொன்றேன்’ என்று நீ மனம் சோர வேண்டியதில்லை. கண்ணபிரான் சொற்படியே நடப்பாயாக” என்றார். அதற்குத் தருமபுத்திரர், “அந்தக் கண்ணன் உதவி கொண்டுதான் ஆசார்யர் துரோணர், கர்ணன் போன்றோரைக் கொல்லக் காரண மானேன். ஆதலால் கசடன் ஆனேன். இனி எந்தப்பழியும் தீக்கதியும் நேர்ந்தாலும் எனக்கென்ன கவலை? எல்லாம் கண்ண பிரான் இட்ட வழக்கே ” என்று கூறினார்.
கண்ணபிரான் ஆறுதல்
அதற்குக் கண்ணபிரான், “அரசே! எல்லாம் என் சொற்படியே நீ செய்தனை என்கிறாய். ஆகலின் உன்னை எந்தப் பழியும் சேராது. அதனால் உனக்கு மறு பிறவியும் கிடையாது. எனவே அரசேற்று ஆளுவாயாக” என்றாஙை. அதனைக் கேட்டுத் தருமபுத்திரர், “அப்படி என்றால் நல்வினை, தீவினைகள் எதனால் வருகின்றன?” என்று கேட்டார். அதற்கு வியாசபகவான், “பொருந்தி வரும் நன்மைகளைச் செய்தால் புண்ணியம் புகும்; நன்மை அல்லாத தீய செயல்களைச் செய்தால் பாவமாகும் ” என்றார்.
அப்பொழுது கண்ணபிரான் வியாசமா முனிவரின் பெருமையை நீ அறிந்துள்ளாய். அதனால் நாரதமாமுனிவரின் பெருமையைக் கூறுகின்றேன் கேள் எனத் தருமபுத்திரருக்குக் கூறலானார்.
மகதி என்னும் வீணையை ஏந்திய நாரதமா முனிவரின் தங்கை பெற்ற மைந்தன் பெயர் ‘பருப்பதன்’ என்பதாகும். மாமன் நாரதரும், மைத்துனன் பருப்ப தனனும் நல்ல நண்பர்களாக இருந்தனர். “ஒருவர் இரகசியத்தை மற்றவரிடம் மறைக்கக் கூடாது ” என்ற உறுதி மொழியை இருவரும் மேற்கொண்டி ருந்தனர். இவ்வாறு உறுதி மொழி செய்து கொண்டு இருவரும் காட்டில் தவம் செய்து வரும் காலத்தில் சஞ்சயன் என்னும் மன்னன் அரண்மனையில் அவன் மகள் சுகுமாரி என்பவள் தங்களுக்கு ஏவல் செய்ய இருவரும் அங்கு சென்று ஓர் ஆறுமாத காலம் தங்கினார்கள்.
அந்த ஆறுமாத காலத்தில் நாரதர் ஆகிய மாமன், மன்னன் மகள் சுகுமாரியைக் கண்டு மயங்கி, காம மோகத்தில் வீழ்ந்து வருந்தினார். இதனை அறிந்த மருமகன் பருப்பதன், “மன்னன் மகள் மீது எனக்குத் தெரியாது மோகம் கொண்டாய்; ஆதலால் எனக்குக் கொடுத்த உறுதி மொழியை மீறிவிட்டாய். எனவே அந்தப் பெண்ணை மணந்து அவளைத் தழுவும் நாளன்று உனக்குக் குரங்கு முகம் உண்டாகும் என்று சாபம் கொடுத்தான். உடனே நாரதர் கோபமுற்று மருமகனான பருப்பதனை அந்த இடத்திற்கு வராதிருக்குமாறு கூற, அவனும் அரண்மனையில் தங்காது காடு சென்றான்
நாரதர் இயல்பான முகம் பெறுதல்
இவ்வாறு இருக்க நாரதருடைய வருத் தத்தை அறிந்த மன்னன் தன் மகள் சுகுமாரியை அந்நாரதருக்குக் கன்னிகாதானத் திருமணம் செய்து கொடுத்தான். அதனால் நாரதர் பருப்பதன் கொடுத்த சாபத்தின்படி குரங்கு முகத்தைப் பெற்றார். குரங்கு முகம் பெற்றும் அவருக்கு மனைவியாக வாய்த்த நங்கை எந்தவித வெறுப்பும் கொள்ளாமல், கணவனுக்குரிய பணிவிடைகளைச் செய்து வந்தாள். ஒரு நாள் தற்செயலாகக் குரங்கு முகத்துடன் நாரதர் காட்டிற்குச் சென்று தன் மருமகன் பருப்பதனைச் சந்தித்தார். சந்தித்ததில் இருவரும் பெருமகிழ்வு கொண்டனர்.
குரங்கு முகம் நீங்கி உண்மையான (இயல்பான) முகம் பெற்ற நாரதர் தன் இல்லம் திரும்பினார். அவர் மனைவி சுகுமாரி, அவர் அயலான் என எண்ணிக் கண்ணெடுத்தும் பாராதவளாய் இருந்தாள். பின்னர் பருப்பதன் நடந்ததைக் கூற குரங்கு முகத்தோடு இருந்தவர் தன் கணவர் நாரதர்தான் எனத் தெளிந்து அந்நாரதரைத்தன் கணவனாக ஏற்றுக்கொண்டு உரிய வழிபாடுகளை நாளும் செய்து வந்தாள்.
சிலநாள் கழித்து பருப்பதன் காட்டிற்குத் தவம் செய்யச் செல்ல. அவனைப் பின்பற்றி நாரதர் தன் மனைவியோடு தவம்செய்யக் காட்டிற்குச் செல்ல இருப்ப தாகத் தன் மாமனார் சஞ்சயனிடம் கூறினார். மாமனாரோ ஓர் ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டுப் பின் செல்லுமாறு கூறிவிட்டார். அதனால் சின்னாள் இருந்து நாரதர் தன் மனைவி சுகுமாரி மூலம் ஓர் ஆண் மகவினைப் பெற்றுக் கொடுத்து விட்டுப்பின் தம்பதியர் இருவரும் காடு சென்றனர். அந்தக் குழந்தையின் பெயர் சுவணெட்டி என்ப தாகும். இக்குழந்தை கழித்த மலம் பொன்னுருவாக இருப்பதை அறிந்து வேடர்கள் அக்குழந்தையைக் கொலை செய்தனர். அதனை அறிந்து காடு சென்ற நாரதர் மீண்டும் நாடு வந்து இறந்த குழந்தையைத் தவமகிமையின் மூலம் உயிர்ப்பித்து, சஞ்சய மன்னனிடம் கொடுத்து, அவன் துயரத்தைப் போக்கி னார். “அத்தகைய சிறப்பு பெற்ற நாரத ருடைய சொல்லைக் கேட்டு நடப்பாயாக” என்று கண்ணபிரான் தருமபுத்திரரிடம் கூறி அருளினார்.
களை எடுத்தலுக்குச் சமம்
அப்பொழுது அர்ச்சுனன் தமையனார் தருமபுத்திரரைப் பார்த்து, “அண்ணா! தரும நெறியில் உலகாள்பவர்கள் போரினைச் செய்து பகைவரைக் கொன்றால் அந்தப் பாவம் அவர்களைச் சேராது. பயிர் நன்கு விளைவான் வேண்டிக் களை எடுத்த லுக்குச் சமமாகும். இத்தகைய தரும் நெறியில் புவி காப்பதைக் காட்டிலும், கானகத்தில் தவம் செய்யச் செல்லுதல் அத்தகைய சிறப்புடையதன்று” என்று கூறினான்.
அதன்பின் அர்ச்சுனன், பகைவர்களை அழித்தல் அரச தருமம் என்பதை விளக்கும் வகையில் ஒரு சிறுகதையும் கூறலானான்.
விகிதன் என்றொரு முனிவன் காட்டில் தவம் செய்து வந்தான். அவனுக்குத் தம்பி ஒருத்தன் இருந்தான். அவன் அண்ண னுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவன்.
அத்தகைய அந்தத் தம்பி ஒருநாள் சனக மகாராஜனுக்குச் சொந்தமான காட்டிலுள்ள ஒரு பழத்தை அறியாது பறித்துவிட்டான். அதை அறிந்த அண்ணன் விகிதன் தம்பியைப் பார்த்து, “தம்பி! தவறு செய்து விட்டாய். உன் தவற்றினைச் சனக மகாராஜனிடம் சொல்லி அவன் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்” என்றான்.
அண்ணன் சொற்படி தம்பியும் தன் தவற்றினைச் சனக மகாராஜனிடம் எடுத்துச் சொன்னான். அரசனோ கோபித்து, பரிசுத்த னான அவன் கையை வெட்டினான். வெட்டுண்ட கையையுடையவனாய் அத் தம்பி நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் தன் தமையனிடம் எடுத்துக் கூறினான். அப்பொழுது அண்ணன் யோகிவிகிதன். “நீ செய்த பாவம் பசுவின் கன்றாய் மாறி உன்னை விட்டு ஏகட்டும் ” என்று கூற அவன் பாவம் பசுவின் கன்றாய் மாறிச் சென்றுவிட்டது. அதனால் அவன் கையும் முன்னைப் போல முழுமை பெற்று விளங்கியது. தேவர்கள் இதனைக் கண்டு அதிசயித்து மலர் மாரி பொழிந்து அவனை வாழ்த்தினர்.
அரசர்க்குத் தர்மம்
பொறுமையை மேற்கொண்ட மன்னன் சனகள் குற்றம் செய்தவர்க்குத் தண்டனை விதித்தனன் ஆதலின் அவனுக்குப் பாவம் சேரவில்லை. எனவே குற்றவாளிகளுக்குத் தண்டனை விதித்தல் அரசர்க்குத் தருமமாகும். “குடிமக்களைப் பிறர் துன்புறுத் தாதபடி பாதுகாத்து, தானும் அவர்களை வருத்தாமல், காப்பாற்றிக் குற்றம் நேர்ந்தால், அக்குற்றத்துக்குத் தக்க வண்ணம் தண்டனைவிதித்து, அக்குற்றத்தைப் போக்குதல் அரசனுக்குப் பழி ஆகாது. அஃது அவன் கடமையேயாகும்” என்றும் சான்றோர் கூறியுள்ளனர். மேலும் “நீ தீமை செய்த துரியோதனாதியர்கட்குத் தண்டனை வழங்கினமையாதலால் அரசாளுதற்குத் தகுதியுடையவன் ஆயினாய். எனவே பாவம் நின்பால் சேராது” என்று அர்ச்சுனன் மேற் கூறிய கதையை உதாரணமாகக் காட்டி தன் தமையனார் தருமபுத்திரருக்கு எடுத்துக் கூறினான்.
கண்ணபிரானும் அர்ச்சுனனும் கதைகள் மூலம் தங்கள் கருத்துக்களைக் கூறியதைக் கேட்ட தருமபுத்திரர், “அவ்வாறு என்றால் பிதாமகர் பீஷ்மர் உயிரோடிருக்கும் வரை நான் முடிசூடேன்” என்றார். “அப்படி யென்றால் பிதாமகர் பீஷ்மர் கருத்தை அறியலாம் என்று அர்ச்சுனன் கூற, தருமபுத்திரர், திருதராட்டிரர், அர்ச்சுனன் முதலான அனைவரும் அம்புப் படுக்கை யில் படுத்துக் கொண்டிருக்கும் பிதாமகர் பீஷ்மரிடம் சென்றனர்.
பிதாமகர் பீஷ்மர்
துயரத்தோடு வந்து வணங்கி நின்ற தருமபுத்திரர் முதலானவர்களை நோக்கி. பிதாமகர் பீஷ்மர். ”தருமபுத்திரா’ போர்க்களத்தில் இறந்தவர்கள் நற்கதி அடையும்படி செய்யவேண்டிய இறுதிக் கடன்களைச் செய்து முடித்தாய். இனிமேல் நாட்டை ஆள்வதுதான் சிறந்த தருமமே தவிர காட்டுக்குப் போவது தருமமாகாது. எனவே தருமா! அத்தினாபுரம் சென்று திருமுடிசூடி குடிமக்களை ரட்சிப்பாயாக. போர் செய்தலாலுண்ட பாவம் உன்னைத் தொடராது” என்று கூறித் தருமபுத்திரரின் ஐயத்தைப் போக்கினார். அவ்வாறு கூறிய அப்பீஷ்மரை, தருமபுத்திரர் முதலானோர் வணங்கி, விடை பெற்றுக் கொண்டு அத்தினாபுரியை அடைந்தனர்.
அத்தினாபுரி மக்கள் நகரமுழுவதும் அலங்கரித்து, அன்போடு வரவேற்க,கடல் போல இன்னிசை வாத்தியங்கள் முழங்க. மேகம் தவழும் அரண்மனைக்கு எதிரில் தேரினின்று இறங்கிச் சபாமண்டபத்தை அடைந்தார்கள். அவரவர்களுக்குத் தகுந்த இருக்கைகள் அருளி, பெண்டிர்களை அந்தப்புரத்திற்குச் செல்லவைத்து, பல்லோர் போற்றிசைக்க, சிறந்ததொரு அமர்ந்திருந்தார். செம்மாந்து
கடல் போல வேதங்களை ஓதிக்கொண்டு வந்து மறையவர்கள் ஆசீர்வாதம் செய்ய, அவர்களையெல்லாம் தக்க விதத்தில் தருமபுத்திரர் உபசரித்தார். அப்பொழுது ஓர் அரக்கன் அந்தணனைப் போல வேடந்தாங்கி, தருமபுத்திரரைப் பார்த்து,”தருமபுத்திரா! பலபேர்களுடைய உயிரைக் கொன்ற பாவி தீ அதனால் நீ ஆட்சிக் கட்டிலில் ஏறுதல் குற்றமுடைத்தாகும்” என்ன, அங்கிருந்த அந்தணர்கள் உருத்து நோக்க, அந்தக் கோபாக்னியில் அவன் மாய்ந்து போனான். இது என்ன அதிசயம்!” என்று தருமபுத்திரர் கேட்க, கண்ணபிரான், “இவன் துரியோ தனனின் நண்பன், அரக்கன் அந்தணர் மனமாறி கோபிப்பரேல் இவன் இறப்பான் என்ற சாபத்தினால் இங்குள்ள அந்தணர் களின் கோபத்திற்கு ஆட்பட்டு இறந்தான். ஆதலின் மனச்சஞ்சலம் கொள்ளற்க” என்று கூறினான்.
தர்மருக்கு முடிசூட்டல்
அப்பொழுது திருதராட்டிரர் விதுரரோடு ஆராய்ந்து மறையவர்களை நோக்கி “தருமபுத்திரருக்கு என்றைக்குத் திருமுடி சூட்டலாம்” என்ன, அவர்கள், “தாளைய தினமே திருமுடி சூட்டலாம்” என்றார்கள். இந்தச் செய்தியை அறிந்த தருமபுத்திரர் அத்தினாபுரியை அலங்கரிக்குமாறு உத்தர விட்டார். கங்கை நீரைக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அந்தணர் களுக்குப் பசுக்களையும், செல்வத்தையும் தானமாக வழங்கினார். பின்னர் அனைவர்க்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டுத் தம்மிருப்பிடம் சேர்ந்தனர்.
துரியோதனன் அரண்மனையில் பீமனையும், துச்சாதனன் அரண்மனையில் அர்ச் சுனனையும், துன்முகன் அரண்மனையில் நகுலனையும், விகர்ணன் அரண்மனையில் சகாதேவனையும், தனியோர் விடுதியில் கண்ணபிரானையும் தங்க இடம் கொடுத்து, தருமபுத்திரர் தாம் சமீபத்திலுள்ள திருதராட்டிரர் அரண்மனைக்குள் புகுந்தார். கர்ணன் பிறப்பினை அறிந்து,தாய் குந்தியைக் கோபித்த தருமபுத்திரர் தம்மையும் வெறுப்பார் என அஞ்சி, சூரியன் மேற்குத் திக்கில் மறைந்தான்.
துரியோதனன் செய்த கொடிய பாவங் களைப் போல உள்ள இருளை நீக்குவான் வேண்டி சந்திரன், தருமபுத்திரரது புண்ணி யங்கள் போலப் பரவியுள்ள தனது நிலாக் கற்றைகளாகிய அம்புகளால் எதிர்த்து ஒழிப்பதற்கு அகன்ற ஆகாயத்தில் நட்சத்திரங்களாகிய சேனையோடு தோன்றினான். பின்னர் காலைப் பொழுதில் பூமிதேவியின் சுமையை நீக்கிய தருமபுத்திரருக்கு முடி சூட்டுதலைக் காண விரும்பி சூரியன் தோன்றினான்.
காலையில் தருமபுத்திரர் உறக்கத்தி னின்று எழுந்து திருதராட்டிரர், காந்தாரி. குந்திதேவி, விதுரர் முதலானவர்களை வணங்கி, கண்ணபிரானின் திருவருளைப் பெற்று, சபையிலிருந்த பெரியோர்களை வணங்கி, அவர்கள் ஆசி பெற்று, தம்பியர் களோடு சிங்காதனத்தை நெருங்கியிருந் தார்.
அதன்பின்னர் அந்தணப் பெருமக்கள் குறித்த நல் முகூர்த்தத்தில் அறுகால் பீடத்தமர்த்தி, கும்பங்களில், கங்கை முதலாய புனித நீர் கொண்டு, மங்கல நீராட்டம் செய்வித்து, தூய ஆடைகளை அணியச் செய்து, பல பொன்னணிகலன் களையும், சந்தனக் கலவையையும், மலர் மாலைகளையும் அணிவித்து அரியாசனத்தில் அமர்த்தினர்.
பின்னர் குந்திதேவி, காந்தாரி, திருதராட்டிரர், விதுரர் முதலானோர் வாழ்த்த, சிவபெருமானைப் போன்ற முனிவர் பெருமக்கள் வேதங்களை ஓத, கண்ணபிரான், இலக்குமியின் கடாட்சம் பெற்று, இந்நிலவுலகத்தைப் பாதுகாக்கும் படி, சிறந்த பொன்னாலாகிய மணிகள் பதிக்கப்பெற்ற ஒப்பற்ற கிரீடத்தைத் தனது செந்தாமரை போன்ற கைகளினால் சூட்டினார்.
நடன மாதரின் ஜதியொலியாலும், முனிவர்களின் வேத ஒலியாலும், தேவர் களின் புகழொலியாலும், காளம், பேரிகை போன்ற கருவிகளின் அட்டதிக்கு யானைகளின் காதுகளில் சென்றுபடுகின்ற நிலையில் எழுப்புகின்ற பேரொலியாலும், கடலோசை அடங்கிப் போயிற்றாம்.
தனது தோள் வலியால் மாற்றாரை வென்று, மறையவர்க்கு வேண்டிய நிதியை வாரி வழங்கி, தருமபுத்திரர் பீமனை இளவரசனாகவும், அர்ச்சுனன் பகைவர் களை வென்று நண்பர்களைக் காக்கின்ற பணியைச் செய்கின்றவனாகவும், நகுலனை சேனா சமுத்திரத்தைக் காக்கின்ற வனாகவும், சகாதேவனைத் தனக்கு உதவியாளனாகவும் இருக்க ஆணையிட்டு, செங்கோலாட்சி புரிந்தார். அதன் பின்னர் அரிய தவத்தைச் செய்த முனிவர்களும் அந்தணப் பெருமக்களும், மற்றவர்களும் தருமபுத்திர மன்னரிடத்தில் விடைபெற்று அவ்விடம் விட்டு அகன்று சென்றனர்.
மகாபாரதம் – 56 திலோதக சருக்கம்… கர்ணன் வரலாற்றை முழுமையாகக் கூறிய குந்தி தேவி Asha Aanmigam