மகாபாரதம் – 54 பாசறை யுத்த சருக்கம்… அஸ்வத்தாமாவின் விவேகமற்ற செயல்

0
8

பாண்டவரைச் சேர்ந்த திட்டத்துய்மன் முதலான படைவீரர்கள் பாடி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கையில் அவர்களை அஸ்வத்தாமன் கொன்ற செய்தியைக் கூறும் பாகம் ஆகும். ‘ஸூப்தி’ என்ற வட சொல்லுக்கு தூக்கம் என்பது பொருளாம். அதில் நிகழும் செயல் சௌப்திகம் ஆகும். இதனைச் சவுத்திகம் எனவும் கூறுவர்.

அஸ்வத்தாமாவின் விவேகமற்ற செயல்

துரியோதனனால் சேனாதியாக்கப் பெற்ற அஸ்வத்தாமன், கிருபாசாரியார், கிருதவன்மா ஆகிய மூவரும் ஓர் பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்தார்கள்.

பகற் பொழுதில் தம்மை வருத்திய காகங்கள் பழுத்த பெரிய ஆலமரத்திலே தங்கியிருப்ப, இரவு வந்தவுடன் தனக்குரிய காலம் இரவு என்று அறிந்து ஒரு கோட்டான் (ஆந்தை) பகலில் தன்னை வருத்திய அந்தக் காகங்களொடு பகைமை கொண்டு கொல்லப் புகுதலை அஸ்வத் தாமன் நேரில் பார்த்தனன்.

”பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது”

என்று திருக்குறளும் காலமறிதல் என்ற அதிகாரத்தில் கூறுதலை இங்கு நினைவு கொள்க.

பாண்டவர்களைத் தேடி அஸ்வத்தாமன்…

இக்காட்சியைக் கண்டவுடன் அஸ்வத்தாமன் காலமறிந்து பாண்டவர்களாகிய பகைவரைக் கொல்ல வேண்டுமென்று முடிவு செய்தான். ஆக அஸ்வத்தாமன் பகைவர் யாவரும் நன்றாக உறங்கும் இரவில் பாண்டவர்களைப் படைவீட்டி லேயே அழித்திட வேண்டுமெனத் துணிந் தான். அதற்காக அந்த இரவில் பாண்டவர் இருக்குமிடம் நோக்கிப் புறப்படவும் செய்தான். அப்போது அவன் மாமன் கிருபாசாரியன், “அஸ்வத்தாமா! இரவில் யாரையும் கொல்லுதல் பாவம். பொழுது விடிந்தபின் காலையில் போர்க்கு எழுதல் தான் முறை” என்று கூறினான்.

அதற்கு அஸ்வத்தாமன், “மாதுவரே! பிதாமகர் பீஷ்மர், ஆசார்யர் துரோணர் போன்ற ஞானவான்களையெல்லாம் கொன்ற பாண்டவர்களை எந்த நேரத்திலும் கொல்லலாம். இதில் பாவமில்லை. மேலும் என் தந்தை ஆசார்யர் துரோணரை வாளால் வீழ்த்திய திட்டத்துய்மனை முதலில் கொல்ல வேண்டும். புறப்படுங் கள்” என்று கூற, மூவரும் பாண்டவர்கள் இருக்கும் பாசறை நோக்கி நடந்து சென்றனர்.

அஸ்வத்தாமன் பாண்டவர்கள் இருக்கும் பாடி வீடு புகுவதற்கு முன்னர் சிவபெரு மான் சிருஷ்டித்த பூதமொன்று அந்த அஸ்வத்தாமனை நோக்கி வந்தது. அதனைக் கண்டு அஸ்வத்தாமன் அஞ் சாமல் அதன் மீது அம்புகள் பல ஏவினான். அவற்றையெல்லாம் அந்தப் பூதம் விழுங்கி விட்டது. அம்புகளையெல்லாம் விழுங்கி விட்ட அப்பூதம் அஸ்வத்தாமனின் வில்லையும் பறித்துக் கொண்டது. பின்னர் அவர்கள் எதிரில் ஆயிரந் திருமால் வடிவுகள் கொண்டு அவர்கள் எதிரே தோற்றமளித்துப் பேராரவாரம் செய்தது. மேலும் அவர்கள் ஏறி வந்த தேர்களை வானத்திலே தூக்கி எறிந்தது. அதனால் அந்தத் தேர்கள் தூள்தூளாக ஆயின. தேரிலிருந்த மூவரும் தப்பிப் பிழைத்து அங்கிருந்த ஓர் ஆலமரத்தின் அடியில் தங்கினர்.

அஞ்சாத அஸ்வத்தாமன்

உடனே அஸ்வத்தாமன், “சிவபெரு மான் துணை கொண்டு இந்தப் பூதத்தை வதைப்பேன் ” என்று கூறி, கங்கையில் நீராடி, மந்திரமாவதும் வானவர் மேலதும் சுந்தரமாவதும், துதிக்கப்படுவதும், தந்திர மாவதும், சைவ சமயத்திலுள்ளதுமாகிய ஒப்பற்ற திருநீற்றினைத் தரித்து, பின்னர் அப்பெருமானைக் குறித்து ஐந்தெழுத்து திருமந்திரமாகிய ‘நமசிவாய’ என்ற திருமந்திரத்தை ஓதலானான்.

ஆனால் சிவபெருமான் மேலும் பல திருவிளையாடல்களைப் புரிய விரும்பிப் பல பூதங்களை அனுப்பினார். அவை குரங்கு, குதிரை, நரி, கரடி, சிங்கம், மான் போன்ற பல முகங்களையுடையனவாகி, ஆரவாரித்து நின்றன. அவற்றைக் கண்டு அஸ்வத்தாமன் அஞ்சவில்லை. ஆனாலும் அதிலே ஒரு பூதம், அவன் கழுத்தைப் பிடித்து நெருப்பிலே தள்ள முயன்றது. அப்பொழுதும் அஸ்வத்தாமன் அஞ்சாது தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள வாளை எடுத்தான். உடனே பூதங் களெல்லாம் மறைந்தன. உமையாளோடு உடனாகிய ஒருவனாகிய சிவபெருமான் ரிஷப வாகனத்தில் தோன்றினார். “அந்தணச் சிறுவனே! அஞ்சற்க. உன் வலிமையை யை அறியும் அறியும் பொ பொருட்டுச் சில திருவிளையாடல்களைச் செய்தேன். என்னோடு செய்த போரில் தோற்ற வில், அம்புறாத் தூணி, தேர் முதலான அனைத்தும் உன்னிடம் வந்து சேரும். இந்த வாளைக் கொண்டு உன் பகைவரை வீழ்த்துவாய் ” என்று கூறி, ஓர் உயர்ந்த வாளையும் கொடுத்து, கயிலை போய் சேர்ந்தார்.

சிவசங்கரன் தந்த வாளைப் பெற்றுக் கொண்ட அஸ்வத்தாமன், தன்னை விட்டுச் சென்ற வில், அம்புறாத் தூணி,தேர் முதலாயின மீண்டும் அச்சிவபெருமான் அருளால் கிடைக்கப்பெற்றான். பின் நடந்த வற்றை, கிருபாசாரியார், கிருதவன்மா ஆகியோருக்கு எடுத்துச் சொன்னான்.

திட்டத்துய்மனையும், உப பாண்டவர்களையும் கொல்லுதல்

மூவரும் இரதத்தின் மேலேறி, பாடி வீட்டிற்குச் சென்றனர். அங்கு உறங்கிக் கொண்டிருந்த திட் ந்த திட்டத்துய்மன் கழுத்தில் அஸ்வத்தாமன் வில்லின் நாணினை மாட்டி நன்றாக இறுக்கினான். பின்னர் சங்கரன் தந்த வாளால் அவன் தலையை வெட்டி வீழ்த்தினான். அதன் மூலம் நிராயுத பாணியாய் இருந்த தன் தன் தந்தையைக் கொன்ற பழியைத் தீர்த்துக் கொண்டான். அதனைக் கண்டு அங்கிருந்த பாஞ்சால மன்னர்கள் வந்து எதிர்த்தனர். அவர் களையும் அவர்களோடு வந்த சிகண்டி, உதாமன், உத்தமோசா ஆகிய மூவரையும் தன் வாளால் வெட்டி வீழ்த்தினான். பின்னர் திரௌபதியின் புதல்வர்களான விந்தன், சோமன், வீரகீர்த்தி, புண்டலன், சயசேனன் (பிரதிவிந்தியன், சுதசோமன். சுருத கீர்த்தி, சதாநீகன், சுருதசேனன் எனவும் வழங்குவர்) என்னும் உபபாண்ட வர்கள் ஐவரையும் இரக்கமின்றிக் கொன்றான். அவர்களுக்குத் துணையாக வந்து எதிர்த்த சோழனையும் கொன்றான். ஒரு நொடியில் அந்தப் பாடிவீட்டை அஸ்வத்தாமன் பிணக்காடு ஆக்கினான். அழித்தற் கடவுளான சிவபெருமானின் அம்சமாதலால் அஸ்வத்தாமன் அச்சங்கரன் கொடுத்த வாளைக் கொண்டே சிகண்டி, திட்டத்துய்மன், சோழன், பாஞ்சால மன்னர்கள், உபபாண்டவர்கள் முதலான அனைவரையும் ஒழித்திட்டான். பாண்ட வர்கள் கண்ணபிரானின் யோசனைப்படி ஓகவதி நதிக்கரையில் சென்று தங்கியத னால் தப்பினார்கள். அவர்களுடன் சாத்தகி யும் தப்பினான். அவனுடைய செய்கை யைக் கண்டு கிருபாசாரியாரும் கிருத வன்மாவும் அஞ்சினர். பின்னர் மூவரும் தேரேறி துரியோதனனை அடைந்தனர். நடந்தவற்றை அவனிடம் கூறினர். அவனும் அதனைக் கேட்டு மகிழ்ச்சி யடைந்தான்.

பின்னர் அவன் அஸ்வத்தாமாவை நோக்கி, “முனி மைந்தரே பாண்டவர்கள், கண்ணபிரான், சாத்தகி தவிர மற்ற அனைவரையும் ஒழித்த நின் வீரத்தை உணர்ந்தேன். நீ செய்த செயலை என் அண்ணன் தருமபுத்திரர் கேள்விப்படின் என்னை இகழ்வார். பகைவர்களும் என்னை இகழ்வர். அதற்குள் நான் இறத்தல் வேண்டும்” என்றான். அரசரைப் போல அந்தணர் படைக்கலம் ஏந்தலும், இரவில் திருடனைப் போலச் சென்று பகைவரை அழித்தலும் தருமம் அன்று ஆதலின் இவ்வாறு கூறினான்.

சிவபெருமானைக் குறித்துத் துரியோதனன் தியானம்

மேலும் அவன், அஸ்வத்தாமனிடம், “குரு மைந்தனே! இளம் பஞ்சபாண்டவர் களைக் (உபபாண்டவர்) கொன்றதனால் ‘பாலஹத்தி தோஷம்’ (சிறுவர்களை வதைத்த தோஷம்) உன்னைப் பற்றி விட்டது. அதனைப் போக்கத் தவம் செய்க. மேலும் நீர் செய்த போர் போதும். நீ போய் விடுக” என்று வெறுப்போடு கூறினான்.

அதன்பின் துரியோதனன் சஞ்சயனை அழைத்து, ”என் தந்தைக்கும் தாய்க்கும் என் செயல்களைக் கூறிப் பின் என் பணிவான வணக்கங்களை எடுத்துச் சொல்க. அதோடு பாண்டவர்களை அழைத்து முடிசூட்டி அவர்களை ஆள வைத்து மனம் தேறியிருக்குமாறு கூறுக. அரண்மனைப் பெண்டிர்களின் துயரத்தைப் போக்குக; தீர்த்த யாத்திரை சென்று திரும்பிய சிற்றப்பா விதுரர்க்கும் பதி னெட்டு நாள் நிகழ்ச்சிகளைத் தெளிவாகக் கூறுக” என்று வேண்டினான். பின்னர் சிவபெருமானைக் குறித்துத் தியானம் செய்யலானான்.

அந்நிலையில் தேவர்கள் மலர் மாரி பொழிய, இறந்த தம் தம்பியர் தொண்ணூற் றொன்பதின்மர் எதிர் கொள்ள, தேவமாதர் ஏவல் செய்ய துரியோதனன் வீர சொர்க்க மடைந்தான். “வணங்காமுடி வேந்தனாகிய இந்தத் துரியோதனன் இந்தப் போர்க் களத்தில் இறந்தது ஊழ்வினையின் செயலே” என்று சஞ்சயன், அஸ்வத்தாமன், கிருபாசாரியார், கிருதவன்மா ஆகிய நால்வரும் எண்ணித் துயருற்று, அவ்விடம் விட்டுச் சென்றார்கள்.

மகாபாரதம் – 54 பாசறை யுத்த சருக்கம்… அஸ்வத்தாமாவின் விவேகமற்ற செயல் Asha Aanmigam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here