ஜகத்காரணரான ஸ்ரீமந்நாராயணர், கருடனை நோக்கி “வைனதேயா! என்னை ஆராதித்து எனது புண்ணிய க்ஷேத்திரங்களில் தான தருமஞ் செய்பவன் புண்ணியங்களை அதிகமாக அடைவான். மாய்ந்து போன ஜீவனைக் குறித்து பூமி தானஞ் செய்தால் பூமியானது எத்தனை அடிகள் ஆழமாக இருக்கிறதோ, அத்தனையாண்டுகள் அந்த ஜீவன் சுவர்க்கலோகத்தில் வசிப்பான். மாரடிதானம் செய்தால் குதிரை மீதேறி நல்லுலகு சேர்வான் என்பது மட்டுமல்ல, அவன் செல்லும் மார்க்கத்தில் முள் முதலியவற்றால் துன்பம் ஏதும் அடையாமல் செல்வான். குடை தானம் செய்தால், நிழலுள்ள பாதை வழியாக யமபுரம் செல்வான். மழை வந்தாலும் அதனால் இன்னலுறான்.
தீபதானம் செய்தால் இருள் வழியில் பிரகாசத்தோடு செல்வான். ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மூன்று மாதங்களிலாவது, சதுர்த்தசியிலாவது, பௌர்ணமியிலாவது ஒருவன் இறந்த தினத்திலாவது தீபதானம் செய்வது சிறப்பாகும். ஒருவன் இறந்த நாள் முதல் ஓராண்டு காலம் வரையிலும் தினந்தோறும் தீபதானம் செய்தால் மாண்டவன் மேடுபள்ளம் இல்லாத நல்லதொரு வழியாக யமபுரியைச் சார்ந்து, அவனது குலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த யமபுரியில் இருந்தால் அவர்களையும் நல்லுலகம் சேர்த்து தானும் நற்கதியை அடைவான். தீபதானத்திற்குள்ள மதிப்பு சிறிதல்ல. பிரமாலயத்திலும், தேவாலயத்திலும் வடக்கு முகமாகவாவது கிழக்கு முகமாகவாவது தீபம் வைக்கவேண்டும். தீபதானம் செய்பவன் தனக்கு எதிர்முகமாக தீபத்தைச் சுடர்விட்டெரியச் செய்து கொடுக்க வேண்டும்.
மனிதனாக பிறந்தவன், என்றாவது ஒருநாள் இறந்தே தீர வேண்டும் என்பதை உணர்ந்தவன் மேலே சொன்ன தானங்களைத் தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டும். ஆசனப் பலகையையும் செப்புத் தாலியையும் சுயம்பாகப் பொருளையும் தானஞ் செய்தவன், மரித்த பிறகு ஆகாய மார்க்கமாகவே இனிதாகச் செல்வான். அரிசியும், எள்ளும், பதின்மூன்று கடகமும், மோதிரமும், குடையும்,விசிறியும். பாதரஷையையும் அவசியமாகத் தானஞ் செய்ய வேண்டும். யானை. குதிரை இவற்றைத் தானஞ் செய்தால் விசேஷமான புண்ணியம் உண்டாகும். எருமைக் கிடாவைத் தானஞ் செய்யும் போது அதனுடன் ஏராளமான பொருள்களையும் தானஞ் செய்வது மிகவும் சிறப்பாகும். வெற்றிலை பாக்கு, புஷ்பம் ஆகியவற்றைத் தானஞ் செய்தால் யமதூதர்கள் மகிழ்ச்சியடைந்து ஜீவனை வருந்தச் செய்ய மாட்டார்கள். ஆடைகளைத் தானஞ் செய்தால், கார்மேகம் போன்று கருத்த மேனியும், பிறைபோன்ற கடைவாய்ப் பற்களும் செம்பட்டை ரோமமும் அச்சந்தரும் பயங்கர உருவமும் கொண்ட யமதூதர்கள் ஜீவனின் முன்பு நல்ல உருவத்துடன் தோன்றுவார்கள்” என்றருளிச் செய்தார்.
கருடன் அவரை நோக்கி, “ஸ்ரீஹரியே! அடியார்க்கெளிய ஆபத்பாந்தவரே! மனிதனின் சரீரத்திலிருந்து உயிரானது எப்படி நீங்குகிறது? இதை திருவாய் மலர்ந்தருள வேண்டும்!” என்று கேட்க, சர்வாந்தர்யாமியான பகவான் கூறலானார்:
“கருடா! உயிரானது மனிதனது சரீரத்தைவிட்டு விலகும்போது கண் வழியாகவோ, நாசி வழியாகவோ. ரோமக் கால்கள் (துவாரம்) வழியாகவோ, நீங்கிவிடும். ஞானிகளுக்குக் கபாலம் விரிந்து நீங்கும். பாபிகளுக்கு அபான மார்க்கமாக உயிர் நீங்கும். உயிர் நீங்கியதும் மனித உடல் கட்டையைப் போலக் கிடக்கும். பிறகு அந்த உயிரற்ற உடல், மரக்கட்டையைப் போன்ற அந்த உடல் பஞ்சபூதாத்மகம் ஆகலாம். உடல் கூறுகள் பஞ்சபூதத்தால் உருவானவை. ஆகையால் பிரித்வி மண்ணிலும், அப்பு புனலிலும், தேயு அக்கினியிலும், வாயு காற்றிலும், ஆகாயம் ஆகாயத்திலும் லயமாகிவிடும்.
காமம், குரோதம், லோபம், மோகம், மதம். மாச்சரியமாகிய ஆறும், கர்மேந்திரியம் ஐந்தும். ஞானேந்திரியம் ஐந்தும் மனித சரீரத்தில் திருடர்கள் போலப் பதுங்கி ஒளிந்து ஒன்றொடொன்று உறைந்து இருப்பன. உயிரானது நீங்கும்போது அவையனைத்தும் மனத்தோடு ஒன்றாகும். சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவியை அடைகிறான். பழைய வீட்டில் வசிப்பவன் பொருள் சம்பாதித்து நல்லதொரு புதிய வீடு கட்டிக் கொண்டு அதில் குடியேறுவதைப் போலவே, புண்ணியஞ் செய்த ஜீவன், தன் வாழ்நாள் முடிந்த பிறகு இந்திரியங்கள் ஐந்தும் அமைந்த ஒரு திவ்விய தேகத்தில் அவன் குடியேறுவான். மல மூத்திரங்களும், பயன் தராத கற்பனைகளும், ஊணும், ஊனும் நரம்பும் எலும்பும் மெய்யோடு நசிக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ நாசமடைந்து விடுவதே மனித உடலாகும்! ஓ, கருடா! மனிதன் மரிக்கும் விதம் இதுவேயாகும். இனி, மனிதன் இறந்த பிறகு, மீண்டும் பிறக்கும் விதத்தையும் சொல்கிறேன், கேட்பாயாக!
“பல நரம்புகளோடு தூணைப் போல் ஒரு பெரிய நரம்பைக் கொண்டதும் இந்திரியங்கள் பொருந்தியதும் காமக் குரோத லோப மோக மதமாற்சரியமாகிய உட்பகைகளுடன் கூடியதும், காம குரோத, இச்சை துவேஷங்களால் வியாபிக்கப் பெற்றதும் மாயையோடு கூடியதுமான தேகம். எல்லாப் பிராணிகளுக்கும் உறுதியாய் உளதாகும். சமஸ்தலோகங்களுக்கும் உரிய சமஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள்!” என்று கூறியருளினார்.